சினிமா

'என்டிஆர் 30' படத்திற்கு நாயகியாகும் ஆலியா பட்

sharpana

கொரட்டலா சிவா இயக்கும் ’என்டிஆர் 30 ’ படத்திற்கு நாயகியாக ஆலியா பட்டும் இசையமைப்பாளராக அனிருத்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் நடித்துவரும் ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். தற்போது சிரஞ்சீவியும் அவரது மகன் ராம் சரணும் நடிக்கும் ’ஆச்சார்யா’ படத்தை இயக்கி முடித்துள்ளார் கொரட்டலா சிவா. விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், அடுத்தவாரம் ‘என்டிஆர்30’ படத்தின் படக்குழுவினர் குறித்த அறிவிப்பு வெளியாகவிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஜூனியர் என்டிஆருக்கு நாயகியாக ஆலியா பட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.

அனிருத்துக்கு இப்படத்திற்காக, நான்கரை கோடி ரூபாய் சம்பளம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தவாரம் படக்குழுவினர் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகும் என்பதால் இன்று முழுக்க ட்விட்டரில்‘என்டிஆர் 30’ ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஆலியா நடித்துள்ளார். ’என்டிஆர் 30’ படத்திற்குப்பிறகு பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். இதற்கான, அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியானது குறிப்பிடத்தக்கது.