சினிமா

மும்பை போலீஸில் அக்ஷராஹாசன் புகார்

webteam

தனது அந்தரங்க புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டவர்களை கண்டுபிடிக்க கோரி மும்பை காவல்நிலையத்தில் நடிகை அக்ஷராஹாசன் புகார் அளித்துள்ளார். 

நடிகை அக்ஷராஹாசன் நடிகர் தனுஷ் மற்றும் அமிதாப்பச்சனுடன் இணைந்து ‘சமிதாப்‘ என்ற படத்தில் நடித்து திரைப்படத்தில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து அஜித்தின் ‘விவேகம்’ படத்திலும் நடித்திருந்தார். 

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள்  அக்ஷராஹாசனின் அந்தரங்க செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது. அவை அனைத்தும் செல்பி புகைப்படங்கள் என்பதால்  அக்ஷராஹாசனே அவற்றை வெளியிட்டிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியது. 

ஆனால் இந்தப் புகைப்படங்கள் ஒரு படத்தின் டெஸ்ட் சூட்டின்போது எடுக்கப்பட்டவை எனவும் துரதிருஷ்டவசமாக இவை இணையத்தில் கசிந்துள்ளதாகவும்  அக்ஷராஹாசன் விளக்கமளித்திருந்தார். 

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் இவை ஒரு படத்தின் தவறான டேக்குகளின் போது எடுக்கப்படும் காட்சிகளைப் போன்றது எனவும் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எனது வேலை நிமித்தமாக இவ்வாறு புகைப்படம் எடுக்க நான் தயாராக உள்ளேன் எனவும் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், தற்போது, மும்பை காவல்நிலையத்தில் நடிகை  அக்ஷரா ஹாசன் புகார் அளித்துள்ளார். அதில், தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை யாரோ இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாகவும் தனது அந்தரங்க புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளார்.