சினிமா

‘அஜித் படத்தை இயக்குகிறேனா?’ - இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் விளக்கம்

webteam

அஜித்தின் அடுத்தப்படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்

அஜித்தின் ‘வலிமை’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருவதாக கூறப்பட்டது. இது முடிந்தவுடன் வட இந்தியாவில் படப்பிடிப்பை தொடங்கப் படக்குழு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. மேலும் இப்படம் குறித்த சில விவரங்கள் தெரியவந்துள்ளன. இந்தியாவில் இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்ட பின், வரும் ஏப்ரலில் சுவிட்சர்லாந்தில் படப்பிடிப்பை நடத்த சில ஏற்பாடுகள் நடந்து வருவதாகத் தெரிகிறது.

வேகமாக படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்துப் பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அஜித்தின் அடுத்தப்படத்தை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்க இருப்பதாக செய்திகள் பரவின. கே.எஸ். ரவிக்குமார் பெயரில் உள்ள ஒரு ட்விட்டர் பக்கத்திலிருந்தே இந்தச் செய்தி பரவியதாக தெரிகிறது.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து கே.எஸ். ரவிக்குமார் விளக்கம் அளித்துள்ளார். அதில் ''கே.எஸ். ரவிக்குமார் பெயரில் ட்விட்டரில் உள்ள போலி கணக்கிலிருந்து நான் அஜித்குமாருடன் இணைய உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. அது வதந்தி. நான் ட்விட்டரில் இல்லை. யாரும் போலிக்கணக்கிற்கு ஆதரவு அளிக்க வேண்டாம்'' எனத் தெரிவித்துள்ளார்.