சினிமா

’வலிமை’ திரையிட தாமதம் - திரையரங்கக் கண்ணாடியை உடைத்த ரசிகர்கள்

Sinekadhara

மதுரையில் ’வலிமை’ படத்தை திரையிட தாமதமானதால் திரையரங்கக் கண்ணாடியை உடைத்து அஜித் ரசிகர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

நடிகர் அஜித்குமார் நடித்து இரண்டு வருடங்களுக்கு பின்பு திரையரங்குகளில் வலிமை திரைப்படம் இன்று வெளியானது. மதுரையில் 20க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியாகி உள்ளது. நள்ளிரவு ஒரு மணி முதல் ரசிகர்கள் ஆரவாரத்துடன் உற்சாகமாக திரைப்படத்தை காண திரையரங்குகளுக்கு முன்பு குவிந்தனர். அஜித்குமார் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள், மேளதாளங்கள் மற்றும் வானவேடிக்கைகளுடன் உற்சாகமாக கொண்டாடி திரைப்படத்தை வரவேற்றனர்.

இந்நிலையில் மதுரை காளவாசல் பகுதியில் உள்ள திரையரங்கில் 4 மணிக்கு காட்சிகள் என்று கூறியிருந்தபோதிலும், நான்கு மணிவரை ரசிகர்களை உள்ளே அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் தடுப்பு வேலிகளை தகர்த்தெறிந்து, திரையரங்கக் கண்ணாடியை உடைத்தனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. பின்பு காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்தி அனைவரையும் திரையரங்குக்கு உள்ளே அனுப்பினர்.