வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
நடிகர் அமிதாப் பச்சன் நடித்த பாலிவுட் திரைப்படம் ‘பிங்க்’, தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. நடிகர் அஜித் குமார் தமிழில் நடிக்கும் இந்தப் படத்தை, ‘சதுரங்கவேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்குகிறார். படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப் படம் போனி கபூரின் தயாரிப்பு நிறுவனத்திற்கு தமிழின் முதல் படமாகும்.
இந்தப் படத்தின் மூலம் தமிழில் முதன்முறையாக வித்யா பாலன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ‘பிங்க்’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் நடிக்கின்றனர். மேலும், அர்ஜுன் சிதம்பரம், ரங்கராஜ் பாண்டே, அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம் உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஆகஸ்ட் 10 ம் தேதி ரிலீஸ் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகள் தற்போது நடைபெறவுள்ளதாகவும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது போல ஆகஸ்ட் 10ல் படம் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நேர்கொண்ட பார்வை திரைப்படம் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள வித்யா பாலன் ''தனது முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள போனி கபூருக்கு வாழ்த்துகள். இந்த சிறப்பான ஒன்றில் நானும் சிறிய பங்காற்றியுள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.