சினிமா

World Listening Day: ”இன்னிக்கு மட்டுமல்ல.. எப்போவுமேதான்”: கஜோலை கலாய்த்த அஜய்தேவ்கன்!

JananiGovindhan

உலகமே நவீனத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சமயத்தில், உள்ளக்குமுறல்களை கேட்க ஒரு நல்ல காது இல்லையே என்ற ஏக்கம் எல்லோருக்கும் இருக்கும். அப்படியானவர்களால் பிரத்யேகமாக கொண்டாடப்படுகிறது world listening day. உலக கேட்போர் தினம் ஜுலை 18ம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

தங்களது எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் அன்புக்குரியவர்கள் செவிமடுத்தால், சிறப்பான வாழ்வை நோக்கி இட்டுச் செல்ல எந்த தயக்கமும் இருக்காது என்பதே அனைத்து பாலரின் எண்ணமாகவே இருக்கும். குறிப்பாக தனது இணையரின் செவிக்கு நம்முடைய வார்த்தை முறையாக சென்றிடாதா என்ற ஏக்கமே அதற்கு சாட்சியாக அமையும்.

அந்த வகையில், பாலிவுட்டின் ரீல் மற்றும் ரியல் ஜோடிகளான அஜய் தேவ்கன் - கஜோல் வீடியோதான் இந்த உலக கேட்போர் தினத்தன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி, நடிகர் அஜய் தேவ்கன் தனது ட்விட்டர் பக்கத்தில், உலக கேட்போர் தினத்தை இன்று மட்டுமல்ல, எந்நாளும் கொண்டாடுவதாக குறிப்பிட்டு அவரது மனைவி கஜோலையும் டேக் செய்து ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

அந்த வீடியோவில், நேர்காணலில் பங்கேற்றிருந்த கஜோல் இடைவிடாது பேசுவதும், அதனை அஜய் தேவ்கன் எந்த சமரசமும் இல்லாமல் கேட்டுக் கொண்டே பாணத்தை குடிப்பதுமாக இருக்கிறது. தற்போது இந்த வீடியோ பதிவின் கீழ் பலரும், இதன் மூலம் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்? என்றும், இந்த வீடியோவை ஷேர் செய்வதற்கு முன்பு கஜோலிடம் அனுமதி பெற்றீர்களா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

World Listening Day-ன் பின்னணி:

இந்த நாள் கனட இசைக்கலைஞரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ரேமண்ட் முரே ஷாஃபரின் பிறந்தநாளை நினைவுகூறும் வகையிலேயே 2010ம் ஆண்டு முதலே இந்த உலக கேட்போர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலக ஒலிக்காட்சி திட்டத்தை உருவாக்கிய இவர்தான் 1970களில் ஒலியியல் சூழலியல் பற்றிய அடிப்படை கருத்துகளை, நடைமுறைகளை வகுத்து, சமூகத்தில் ஒரு புதிய வகையான விழிப்புணர்வை உருவாக்கினார்.