நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த *‘King of Kotha’* திரைப்படத்திற்குப் பிறகு தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம்திறந்து பேசியுள்ளார். குறிப்பாக, அந்தப் படத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட ட்ரோலிங் தனது தன்னம்பிக்கையையும், தொழில்முறை வாய்ப்புகளையும் பாதித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ‘King of Kotha’ படம் வெளிவாகும் முன்பு அதன்மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்தப் படம் வெளியான பின்னர், என்னுடைய சினிமா பயணமே பாதிக்கப்பட்டது. இப்போது நான் சொல்வது தவறாகக்கூட இருக்கலாம். அந்தப் படத்துக்குப் பிறகு எனக்கு பட வாய்ப்பு கொடுக்க்கூட பலரும் பயந்தனர். அந்த அளவுக்கு ’King of Kotha’ படம் Troll செய்யப்பட்டது.
பொழுதுபோக்காகப் பலரும் அந்தப் படத்தைக் கிண்டல் செய்தனர். அதன் பாதிப்பு எனக்கு மட்டுமல்ல, துல்கர் சல்மான்கூட Troll செய்யப்பட்டார், மொத்த படமும் கிண்டல் செய்யப்பட்டது, என்னுடைய டயலாக் டெலிவரி கேலி செய்யப்பட்டது. குறிப்பாக, படத்தில் நான் துல்கர் சல்மானின் கதாபாத்திரத்தை ‘ராஜு யேட்டா’ என்று அழைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக கிண்டல் செய்யப்பட்டது. அந்தப் படத்தில் எனக்கு அதிகப்படியாக இருந்த வசனம் ‘ராஜு யேட்டா’தான்.
இதன் பாதிப்பு நான் அடுத்து நடித்த ‘Hello Mummy’ படப்பிடிப்பின்போதுகூட தொடர்ந்தது. அந்தப் படத்தின் உதவி இயக்குநர் ஒருவர், ‘ராஜு யேட்டா’ என்ற பெயரைவைத்து என்னை கிண்டல் செய்தார், அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்ததது. இந்தப் பாதிப்பின் காரணமாக, துல்கருடன் இணைந்து ஓணத்துக்காக ஒரு விளம்பரப் படத்தில் என்னை நடிக்க கேட்டபோது, நான் மறுத்துவிட்டேன். ‘கிண்டல்கள் தீவிரமாக இருக்கிறது, இப்போது நாங்கள் மீண்டும் இணைந்து நடிப்பது சரியாக இருக்காது’ எனக் கூறினேன். இந்த அனுபவத்திற்குப் பிறகு, இனி துல்கர் சல்மானுடன் என்னால் மீண்டும் பணியாற்ற முடியுமா என்றுகூட தெரியவில்லை. எங்களுடையது பொதுமக்கள் முன்னிலையில் இருக்கக்கூடிய ஒரு துறை. இதில் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதும் மிக முக்கியம்.
உங்களது கடைசிப் படத்தின் வெற்றியோ, தோல்வியோதான் இங்கு முக்கியம். ஒரு படத்தில் நடந்த தவறு சரியாகும்வரை, சில விஷயங்களில் இருந்து விலகி இருப்பதுதான் நல்லது. மேலும், இப்போதெல்லாம் ட்ரோல் என்பது எல்லையற்றதாக, இரக்கமற்றதாக இருக்கிறது. மேலும் துல்கருடன் நடிக்க மாட்டேன் எனச் சொன்னது, அவர் மீதான தனிப்பட்ட பிரச்னை அல்ல; ‘King of Kotha’ படத்திற்குப் பிறகு ஏற்பட்ட எதிர்மறையான விமர்சனங்கள் தன்னிடம் ஏற்படுத்திய தாக்கமே இதற்குக் காரணம" என்றார் ஐஸ்வர்யா லட்சுமி. ஒரு படத்தின் தோல்வியும் அதனைத் தொடர்ந்து வந்த கடுமையான ட்ரோலிங்கும் ஒரு நடிகையின் மனநிலையையும் அடுத்தடுத்த வாய்ப்புகளையும் எந்த அளவுக்கு பாதிக்க முடியும் என்பதற்கான வெளிப்பாடாகவே ஐஸ்வர்யாவின் பேட்டி பார்க்கப்படுகிறது.