சினிமா

”இப்படி ஆகும்னு நினைக்கல”.. அர்ஜூன் தாஸ் உடனான போட்டோ குறித்து ஐஸ்வர்யா லக்ஷ்மி விளக்கம்!

சங்கீதா

நடிகர் அர்ஜூன் தாஸ் உடன் இருந்த புகைப்படத்தை பகிர்ந்ததால் எழுந்த கருத்துக்களுக்கு, நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் வாயிலாக பதிலளித்துள்ளார்.

மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. தமிழில் விஷால், தமன்னா நடிப்பில் வெளியான ‘ஆக்ஷன்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து தனுஷின் ‘ஜகமே தந்திரம்’, ‘கார்கி’, ‘கேப்டன்’, ‘பொன்னியின் செல்வன் 1’, ‘கட்டா குஸ்தி’ உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். இதில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்திலும், ‘கட்டா குஸ்தி’ படத்தில் கீர்த்தி கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். மேலும், சாய் பல்லவியின் ‘கார்கி’ படத்தில் பத்திரிக்கையாளராகவும் நடித்ததுடன் அந்தப் படத்தை தயாரித்தும் இருந்தார்.

இதற்கிடையில் தனது தனித்துவமான குரல் மற்றும் நடிப்பால் ‘கைதி’, ’அந்தகாரம்’, ‘மாஸ்டர்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜூன் தாஸுடன் இருக்கும் புகைப்படத்தை ஐஸ்வர்யா லக்ஷ்மி தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள், அர்ஜூன் தாஸ் - ஐஸ்வர்யா லக்ஷ்மி இருவரும் காதலில் இருப்பதாகக் கருதி தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து ஐஸ்வர்யா லக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னிலை விளக்கமளித்துள்ளார். அதில், ‘எனது முந்தையப் பதிவு இவ்வளவு பெரிதாகும் என்று எதிர்பார்க்கவில்லை. நானும் அர்ஜூன் தாஸும் சந்திக்க நேர்ந்தது, அப்போது புகைப்படம் எடுத்து பதிவிட்டேன். இதில் வேறெதுவும் பேசுவதற்கு இல்லை. நாங்கள் இருவரும் நண்பர்கள். நேற்றிலிருந்து எனக்கு மெசேஜ் அனுப்பும் அர்ஜூன் தாஸ் ரசிகர்களே அவர் எப்போதும் உங்களுக்கானவர்” எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் காதல் என பரவி வந்த வதந்திக்கு ஐஸ்வர்யா லக்ஷ்மி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.