சமூக வலைதளங்களில் அவ்வப்போது புதிய AI போட்டோ ட்ரெண்டுகள் வைரலாவது வழக்கம். அந்த வரிசையில் தற்போது 1980களின் சினிமா மற்றும் ஃபேஷன் ஸ்டைலை மீண்டும் உருவாக்கும் ‘80s Photo Trend‘ இணையத்தை கலக்கி வருகிறது. குறிப்பாக, சினிமா பிரபலங்களே இந்த ட்ரெண்டில் இணைந்து தங்களது ரெட்ரோ புகைப்படங்களை பகிர்ந்துவருவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் 80களின் திரைப்படக் கதாபாத்திரங்களை நினைவுபடுத்தும் வகையிலான AI புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். நடிகை ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் 80களின் கிளாமரான ரெட்ரோ தோற்றத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். தொடர்ந்து சந்தீப் கிஷன், சினேகா, மீனா, பாவனா என பல பிரபலங்களும் தங்களின் புகைப்படங்களை ரெட்ரோ ஸ்டைலில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் ரசிகர்கள் அந்த புகைப்படங்களை தங்களுக்குப் பிடித்த பழைய திரைப்படங்களின் காட்சிகளுடன் ஒப்பிட்டு ரசித்து வருகின்றனர்.
ஏன், 80ஸ் ட்ரெண்ட் இவ்வளவு வைரல் ஆனது என்று பார்த்தால், 1980கள் என்பது இந்திய சினிமாவின் முக்கியமான காலகட்டங்களில் ஒன்று. அப்போது இருந்த ஹீரோ ஹேர் ஸ்டைல், ஹீரோயின்களின் ஃபேஷன், வண்ணமயமான உடைகள், ஸ்டுடியோ போட்டோஷூட்கள், ஃபிலிம் கேமராவின் தனித்துவமான நிறங்கள் என அந்த காலத்துக்கே உரிய ஒரு தனி அழகியல் இருந்தது. இப்போது AI அந்த உலகத்தை மீண்டும் உருவாக்குவதால், இன்றைய தலைமுறையினர் “நாம் 80களில் பிறந்திருந்தால் எப்படி இருந்திருப்போம்” என்ற கேள்விக்கு ஒரு கற்பனை பதிலைப் பார்க்க முடிகிறது. அதே நேரத்தில், 80களின் சினிமாவைப் பார்த்து வளர்ந்தவர்களுக்கு இது பழைய நினைவுகளை மீண்டும் கொண்டுவருகிறது.