’விக்ரம் 61’ படத்தை முடித்தப்பிறகு இயக்குநர் பா.ரஞ்சித் கமல்ஹாசனுடன் இணைகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
‘சார்பட்டா பரம்பரை’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் பா.ரஞ்சித் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயனை வைத்து ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் நிறைவடைந்தது. அடுத்ததாக விக்ரமின் ‘விக்ரம் 61’ படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார். சமீபத்தில், அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
’கோப்ரா’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு, ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்காக எடுக்கவேண்டிய சிலக் காட்சிகள் படமாக்கப்பட்டவுடன் ’விக்ரம் 61’ படப்பிடிப்பில் விக்ரம் இணையவுள்ளார். இந்த நிலையில், ‘விக்ரம் 61’ படத்தை முடித்தவுடன் இயக்குநர் பா.ரஞ்சித் நடிகர் கமல்ஹாசனுடன் இணையவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, பா.ரஞ்சித் கமல்ஹாசனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கதை விவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. பா.ரஞ்சித்தின் ‘விக்ரம் 61’, கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படங்கள் முடிந்தவுடன் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.