சினிமா

போட்டோஷாப் புகைப்படத்தை பகிர்ந்து பின்னர் வருத்தம் தெரிவித்த உதயநிதி!

போட்டோஷாப் புகைப்படத்தை பகிர்ந்து பின்னர் வருத்தம் தெரிவித்த உதயநிதி!

webteam

ரஜினிக்கு கமல் கூட்டணி அழைப்பு கொடுத்துவரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும், நடிகர் ரஜினிகாந்தும் தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டும் என நடிகர் விஷால் விருப்பம் தெரிவித்தார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் சேர்ந்து வர வேண்டும். இது நடிகர் சங்க விழாவுக்கோ, எந்த நடிகரின் வரவேற்புக்கோ, வேறு எதற்குமே அல்ல. அவர்கள் வரவுள்ள மக்களவை தேர்தலுக்கு சேர்ந்து வர வேண்டும். அது மாற்றத்தை கொண்டுவரும் நடவடிக்கையாக அமையும்'' என்று தெரிவித்து இருந்தார்.

அதற்கு பதில் அளித்திருந்த உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் இணைந்து போராட்டத்தில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தில் ''ஜெயலலிதா ஊழலுக்காக சிறை சென்றபோது தீர்ப்பை எதிர்த்தும், ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்தும் கமல் உண்ணாவிரதம்'' என்று குறிப்பிட்டு இருந்தது.

ஆனால் அந்த புகைப்படம், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் எடுக்கப்பட்டது. அந்த விழாவில் கமல், ரஜினி உள்ளிட்டோர் கலந்துகொண்ட புகைப்படம். இந்நிலையில் போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படத்தை உண்மை தன்மை அறியாமல் உதயநிதி ஷேர் செய்து விமர்சனம் செய்ததால் அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். 

பின்னர் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட உதயநிதி, ''முதல்முறையாக உறுதிசெய்யாமல் போலி போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துவிட்டேன். மன்னிப்பு கோருகிறேன். இது என் தவறுதான். என் அட்மின் தவறு அல்ல. அந்த புகைப்படத்தையும் டெலிட் செய்து விட்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.