சினிமா

பாலியல் புகார்: இயக்குனர் சஜித் கான் நீக்கம், நடிகரிடம் விசாரணை!

webteam

நடிகைகளால் பாலியல் புகார் கூறப்பட்ட பிரபல இந்திப் பட இயக்குனர் சஜித் கான், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர்கள் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

'மீ டூ' இயக்கம் மூலம், பல்வேறு நடிகைகள் உட்பட பல பெண்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொல்லை குறித்து புகார்களை கூறிவந்தனர். இந்தி சினிமா இயக்குனரும், நடிகருமான சஜித் கான் மீது நடிகைகள் ராச்சல், உதவி இயக்குனர் சலோனி சோப்ரா மற்றும் ஒரு பத்திரிகையாளர் பாலியல் புகார் தெரிவித்து இருந்தனர். இதை விசாரிக்க, இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. 

இந்த கமிட்டி, சஜித் கானிடம் அவர் மீதான புகார்கள் குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரியது. ஆனால் சங்கத்தின் கோரிக்கைக்கு அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.இதையடுத்து இந்தச் சங்கத்தில் இருந்து அவர் ஒரு ஆண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாலியல் புகார் காரணமாக சஜித் கான் அக்‌ஷய்குமார் நடிக்கும் ’ஹவுஸ்புல்-4’ படத்தில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இந்த அமைப்பின் தலைவர் அசோக் பண்டிட் கூறும்போது, ‘’ அடுத்து தயாரிப்பாளர் வின்டா நந்தா, நடிகர் அலோக்நாத் மீது கூறிய பாலியல் புகார் குறித்து விசாரிக்க இருக்கிறோம்’’ என்றார்.

இதற்கு அலோக் நாத் விளக்கமளிக்கவில்லை என்றால் அவருக்கும் இடைக்கால தடை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.