சினிமா

பிறந்தநாளில் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா.. செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்!

சங்கீதா

தனது 39-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை திரிஷா இன்று சாமி தரிசனம் செய்தார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான திரிஷா தனது 39-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி சினிமா பிரபலங்களான ராதிகா சரத்குமார், குஷ்பூ சுந்தர் உள்பட பல பிரபலங்கள் அவருக்கு தங்களது சமூகவலைத்தளப் பக்கங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில், விஐபி தரிசனத்தில் நடிகை திரிஷா இன்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சாமி தரிசனம் செய்து வைத்து ரங்கநாதர் மண்டபத்தில் பிரசாதங்களை வழங்கினர்.

பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த திரிஷாவுடன் அங்கிருந்தவர்கள் செல்ஃபி எடுக்க முண்டியடித்தனர். திரிஷாவின் பாதுகாப்புக்கு வந்த போலீசாரும் கூட செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டிய நிலையில், கோயிலில் இருந்து அவரது கார் நிறுத்தி வைக்கப்பட்ட இடம் வரை தொடர்ந்து ரசிகர்கள் பக்தர்கள் என செல்ஃபி எடுத்தபடி சென்றனர்.

நடிகை திரிஷா, தற்போது ‘பொன்னியின் செல்வன் 2’ பாகத்திலும் நடித்து முடித்துள்ளார். இதில், முதல்பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் ’சதுரங்க வேட்டை 2’, ‘ராம்’ உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ள திரிஷா, சோனி லைவ் ஓடிடி தளம் தயாரிக்கும், ‘பிருந்தா’ வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.