சினிமா

”சொந்த வாழ்க்கை இருக்கிறது.. புரிந்து கொள்ளுங்கள்” - காதல் வதந்திகள் பற்றி தமன்னா வருத்தம்

JananiGovindhan

திரைத்துறையில் 18 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்டாக இருக்கக் கூடிய தமன்னா. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் முன்னணி நாயகியாக இருக்கிறார் தமன்னா.

தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அடுத்தபடியாக சுந்தர்.சி-யின் அரண்மனை நான்காம் பாகத்தில் தமன்னா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

சினிமாவில் தனது 18 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் தமன்னாவும் வதந்திகளும், பொய்ச் செய்திகளும், பரபரப்புகளுக்கும், கிசுகிசுக்களுக்கும் பஞ்சமே இல்லாத நடிகையாகவே இருக்கிறார். அதன்படி அண்மைக்காலமாக தமன்னாவின் காதல் உறவு மற்றும் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டே வருகிறது.

குறிப்பாக இந்தி நடிகரான விஜய் வர்மாவும் தமன்னாவும் காதலிப்பதாக தொடர்ந்து பதிவுகள் பகிரப்பட்டுக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில்தான் தமன்னாவே இது தொடர்பாக மறுத்து விளக்கமும் அளித்திருக்கிறார்.

அதில், “எதிர்மறை பதிவுகளை பரப்புவது அதிகரித்துவிட்டன. இந்த மாதிரியான வதந்திகளை யார் பரப்புகிறார்கள் என தெரியவில்லை. எனக்கெதிராக நிறைய வதந்திகள் பரவுகின்றன. நான் காதலிப்பதாக சொல்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது. அனைவருக்குமே சொந்த வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறது. அதனை புரிந்து கொள்ளுங்கள்.” என தமன்னா தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதனிடையே நடிகை தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவது உறுதி என்றும் அது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகவே இருக்கப் போகிறது என்றும் அவரே பேட்டியில் தெரிவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.