சினிமா

"அங்கீகாரம் பற்றி அவர் கவலைப்பட்டதில்லை" - தந்தை பற்றி பேசிய சரண்யா பொன்வண்ணன்

"அங்கீகாரம் பற்றி அவர் கவலைப்பட்டதில்லை" - தந்தை பற்றி பேசிய சரண்யா பொன்வண்ணன்

webteam

நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தையும், மூத்த திரைப்பட இயக்குநருமான ஏ.பி.ராஜ், அண்மையில் காலமானார். தன் தந்தையைப் பற்றிய நினைவுகளை அவர் இந்து தமிழ் திசை நாளிதழுக்கு பகிர்ந்துகொண்டுள்ளார்.

தன்னுடைய தந்தை இயக்கிய திரைப்படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவை நகைச்சுவை, உணர்வுகள், ஆக்‌ஷன் நிறைந்த நல்ல பொழுதுபோக்குத் திரைப்படங்கள் என்று கூறியுள்ள சரண்யா, " அப்பாவின் திரைப்படங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இயக்குநர் ஏ.பி. ராஜ், 1989 ம் ஆண்டு 'அர்த்தம்' படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் நுழைந்தார். "பிறகு அறுபதுகளில் இருந்து எழுபதுகள் வரை எந்த மாதிரியான திரைப்படங்களை எடுத்தார் என்பது எனக்குத் தெரியவந்தது. 'இரும்பழிக்கல்' போன்ற படங்களைக் காண டிக்கெட் வாங்க பெரிய வரிசையில் நின்றதாக எனது சக நடிகர்கள் என்னிடம் கூறியுள்ளனர்" என்று நெகிழ்ந்துள்ளார் சரண்யா.

"மணிரத்னம் சார் 'நாயகன்' வாய்ப்பை எனக்குத் தந்தபோது நான் திரைப்படங்களில் நடிப்பது குறித்து அப்பா பெரிய ஆர்வம் காட்டவில்லை. திரைப்படத் துறையில் தொழிலைத் தொடர நான் நிறைய தியாகங்கள் செய்யவேண்டும் என்று அப்பா கூறினார். எனக்கு நடிக்கவே விருப்பம் இருந்ததால் அவர் என்னை ஆதரித்தார். நான் நடித்த படங்கள் அவருக்குப் பிடித்திருந்தன. ஆனால், இன்றைய தலைமுறைக்கு அவரைப் பற்றித் தெரியவில்லை. அவருக்கு இன்னும் அதிக அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதில்லை" என்றும் சரண்யா பொன்வண்ணன் மனந்திறந்து பேசியுள்ளார்.