சினிமா

“ஹைதராபாத்தில் இருந்து வெளியேறி மும்பையில் குடியேறுகிறேனா?”: நடிகை சமந்தா விளக்கம்

sharpana

மும்பையில் குடியேறப்போவதாக எழுந்த தகவலுக்கு விளக்கம் அளித்திருக்கிறார் நடிகை சமந்தா.

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்த இவர்களின் திருமணத்திற்குப் பிறகு சமந்தா ஹைதராபாதில் வசித்து வருகிறார். சமந்தா ரூத் பிரபு என்று இருந்த தனது சமூக வலைதள பக்கங்களின் பெயரை நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை சேர்த்து ‘சமந்தா அக்கினேனி’என்று மாற்றினார்.

இந்த நிலையில், சமந்தா அக்கினேனி என்ற பெயரை நீக்கிவிட்டு வெறும் ‘S' என்று தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் சமீபத்தில் மாற்றியது நாக சைதன்யா - சமந்தா ஜோடி விவாகரத்து செய்யவிருக்கிறார்கள் என்ற வதந்தியை பரப்பியது. அதேசமயம், தற்போது ‘சகுந்தலம்’ படத்தில் நடித்து வருவதால் ‘s’என மாற்றினார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், அமீர்கானுக்கு நாக சைதன்யா குடும்பம் ஹைதராபாத்தில் விருந்து அளித்தனர். அதில், சமந்தா மிஸ்ஸிங். அதேபோல, நாக சைதன்யாவின் ‘லவ் ஸ்டோரி’ கடந்தவாரம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து பாராட்டுக்களைக் குவித்துக்கொண்டிருக்கிறது. அதுகுறித்த, பட போஸ்டர் எதுவுமே சமந்தா தனது சமூக வலைதளங்களின் பக்கங்களில் வெளியிடவில்லை. ஆனால், இதற்குமுன் சமந்தா எப்போதும் நாக சைதன்யாவின் படங்களை புரமோட் செய்துகொண்டே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சமந்தா விவாகரத்து செய்யவிருப்பதால் மும்பையில் சென்று குடியேறுகிறார் என்று வதந்தி பரவியது. இதுகுறித்து, இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் ”நீங்கள் உண்மையில் மும்பைக்கு செல்கிறீர்களா?” என்று கேட்டதற்கு "இந்த வதந்தி எங்கிருந்து தொடங்கியது என்று எனக்குத் தெரியாது. ஆனால், மற்ற நூறு வதந்திகளைப் போல, உண்மை இல்லை. ஹைதராபாத் என் வீடு, எப்போதும் என் வீடு. ஹைதராபாத் எனக்கு எல்லாவற்றையும் தந்திருக்கிறது. நான் தொடர்ந்து இங்கு மகிழ்ச்சியாக வாழ்வேன்” என்று கூறியுள்ளார்.