பிரபல தென்னிந்திய முன்னணி நடிகை சமந்தா, தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது ரசிகர்கள் இடையே கவனம் பெற்றுள்ளது.
செய்தியாளர்: விக்கி
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, கடந்த 2025ஆம் ஆண்டு இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, தனது கணவரான ராஜ் நிடிமோரு கதை எழுதி, சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ’மா இண்டி பங்காரம்’. இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூல்ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், ’மா இண்டி பங்காரம்’ படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட நடிகை சமந்தா, தான் தாயாகப்போவதை உறுதி செய்துள்ளார்.
மேலும், இதற்காக அவர் தற்காலிகமாக திரைத்துறையிலிருந்து மகப்பேறு விடுப்பு எடுக்கவிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "நான் தற்போது மகப்பேறு விடுப்பு எடுக்கிறேன். எனது தனிப்பட்ட மகிழ்ச்சிக்கான உங்களுடைய வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றிகள்." நடிகை சமந்தா கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த தகவல்கள் முற்றிலும் உண்மை என்பதை அவரே இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். இச்செய்தி வெளியானதைத் தொடர்ந்து, திரை உலகினரும் அவரது ரசிகர்களும் சமந்தாவிற்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதோடு, நடிகை சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை மீதும் ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. ஏற்கெனவே தனது முதல் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்த பிறகு, வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொண்ட சமந்தா, அதன் பின்னர் மீண்டும் மகிழ்ச்சியாக தனது வாழ்க்கையை முன்னெடுத்து வருவதாக கூறப்பட்டு வந்தது.
தற்போது அவரது இரண்டாவது திருமண வாழ்க்கையில் இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில்தான் அவர் கர்ப்பமாக இருக்கும் தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. திரை வாழ்க்கை, சொந்த வாழ்க்கை என பல போராட்டங்களையும், சவால்களையும் கடந்து வந்த சமந்தா, தற்போது தாய்மையின் புதிய அத்தியாயத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளார். அவரது கர்ப்ப அறிவிப்பும், மெட்டர்னிட்டி லீவ் குறித்தும், ரசிகர்கள் மத்தியில் மிகவும் மகிழ்ச்சியாக பேசி வருகிறார்கள்.