சினிமா

”உறுதியோடு இருங்கள் சமந்தா” - ஆதரவாக ரகுல் ப்ரீத் சிங், மஞ்சிமா மோகன்

sharpana

”கருக்கலைப்பு செய்தேன்.. நான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை போன்ற வதந்திகளை நம்பவேண்டாம்" என்று நடிகை சமந்தா அறிக்கை வெளியிட்டுள்ளதற்கு நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், மஞ்சிமா மோகன் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த 2017-ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனிடையே, கடந்த 2 ஆம் தேதி “நீண்ட ஆலோசனைக்கு பிறகு நானும், நாக சைதன்யாவும் கலந்து பேசி திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து அவரவர் வழியில் செல்ல முடிவு செய்துள்ளோம்” என்று அதிகாரபூர்வமாக விவாகரத்து குறித்து அறிவித்தார் சமந்தா.

விவாகரத்துக்குப்பிறகு சமந்தா வேறொருவருடன் காதலில் இருப்பதாகவும், குழந்தைப் பெற்றுக்கொள்ள சம்மதிக்கவில்லை என்றும் தொடர்ந்து வதந்தி பரவி வந்த நிலையில், சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ”எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ஆனால், நான் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறேன், குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை, நான் ஒரு சந்தர்ப்பவாதி, கருக்கலைப்பு செய்துள்ளேன் போன்ற பல்வேறு வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். விவாகரத்து என்பது வலிமிகுந்தது. இதிலிருந்து மீண்டுவர எனக்கு நேரம் தேவைப்படுகிறது. என் மீதான இந்த தனிப்பட்ட தாக்குதல்கள் தொடரத்தான் செய்யும். ஆனால், இதனை இனியும் அனுமதிக்கமாட்டேன். அவர்கள் கூறும் எதுவும் என்னை உடைக்காது என்பதை உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமந்தா பதிவில் சென்று ஹார்ட் பதிவிட்டு உறுதியோடு இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு, நடிகை மஞ்சிமா மோகன் ‘உறுதியோடு இருங்கள் சமந்தா” என்றுக்கூறி ரீட்விட் செய்துள்ளார்.

ஏற்கனவே, சமந்தா விவாகரத்து செய்கிறோம் என்று அறிவித்தபோது, நடிகை கங்கனா ரனாவத் சமந்தாவுக்கு ஆதரவாக கருத்திட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.