நடிகை ரோஷினி -  நடிகர் கமல்ஹாசன்
நடிகை ரோஷினி - நடிகர் கமல்ஹாசன் PT
சினிமா

முதலும் கடைசியுமாக ‘குணா’ - நடிகை ரோஷினி நடிப்பில் இருந்து வெளியேற காரணம் என்ன?

யுவபுருஷ்

மஞ்சுமல் பாய்ஸ் பட வெளியீட்டின் மூலம், 34 ஆண்டுகளுக்கு முன்பு ரிலீஸ் ஆன நடிகர் கமல்ஹாசனின் ’குணா’ படம் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. வித்தியாசமான கதைக்களம், கமலின் மாறுபட்ட நடிப்பு மற்றும் இசை என அனைத்தும் மெச்சும்படி இருந்தாலும், அந்த படத்திற்கு போட்டியாக வெளியான தளபதி படத்தின் மாபெரும் வெற்றியால், குணா படம் பெரிதாக கொண்டாடப்படவில்லை.

இதற்கிடையே, மஞ்சும்மல் பாய்ஸ் படம், உண்மைக் கதையை வைத்து எழுதப்பட்டது, அந்த குகையின் ஆபத்துகள் போன்றவையோடு குணா படத்திற்கும் ஒரு சரியான Tribute ஆகவே அமைந்ததாக பலரும் நெகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இந்த நேரத்தில், குணா படத்தின் மூலம் அபிராமி என்று அழைக்கப்பட்ட படத்தின் நாயகி ரோஷினி குறித்த தகவல்களும் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஒரே கதாப்பாத்திரம் என்றாலும், உலக நாயகன் கமலுக்கு டஃப் கொடுத்து நடித்தது இன்றளவும் பலராலும் சிலாகிக்கப்படுவது உண்டு. அப்படி இருக்க, குணா படத்தின் மூலம் பலருக்கு ஆதர்ச நாயகியாக மாறிய நடிகை ரோஷினி, அதற்கு மேல் ஏன் படம் நடிக்கவில்லை. அவருக்கு என்ன ஆனது போன்ற கேள்விகள் எழுந்து வருகிறது.

கமல்ஹாசன் - ரோஷினி

இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளித்து பேசியிருக்கும் குணா பட இயக்குநர் சந்தான பாரதி, “குணா படம் முடியும்போதே, அதற்கு மேல் படத்தில் நடிக்க ரோஷினிக்கு விருப்பமில்லை. இனிமேல் நடிக்கப்போவதில்லை என்று அப்போதே கூறிவிட்டார். அவர்களும் மும்பையில் ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த படத்தில் நாயகியை தேர்வு செய்ய நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டோம். அப்போதுதான் நடிப்புப்பயிற்சி பள்ளியில் இருந்த ரோஷினியை தேர்வு செய்தோம். தேவதை போன்று ஒரு புது முகம் வேண்டும் என்பதால்தான் அவரை நடிக்க வைத்தோம். அப்போது அவருக்கு மொழி புரியாததால், பல டேக்குகள் எடுக்க வேண்டியிருந்தது” என்றார்.

இதனால், குணா படத்திற்கு பிறகு, நடிப்பிற்கு முழுக்கு போட்ட ரோஷினி, அடுத்தடுத்த திருமண வாழ்க்கையில் குடும்பத்தலைவியாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில், படத்தை பலரும் நினைவுகூர்ந்து வரும் நிலையில், ரோஷினிக்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.