சினிமா

“100 நாட்களாக ஐசியூவில் இருந்த குழந்தை இப்போது வீட்டில்”-மகிழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா

JustinDurai

நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற நிலையில் இந்த குழந்தையின் புகைப்படத்தை முதன்முதலாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, கடந்த  2018-ஆம் ஆண்டு அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த தம்பதியினர், வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தை பெற்றுக் கொண்டனர். இதனையடுத்து தனது குழந்தையின் புகைப்படத்தை முதல் முதலாக பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், பிரியங்கா சோப்ரா தனது குழந்தையை மார்போடு அணைத்தபடியும், நிக் ஜோன்ஸ் குழந்தையின் கையைப் பிடித்தபடியும் உள்ளனர். இருப்பினும், தங்கள் குழந்தையின் முகத்தை ஹார்டின் எமொஜி மூலம் மறைத்துள்ளனர்.

இதுகுறித்து பிரியங்கா-நிக் ஜோன்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த அன்னையர் தினத்தில் கடந்த சில மாதங்களாக நாங்கள் பயணித்த கடினமாக காலத்தை பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. 100 நாட்களாக குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த எங்கள் குழந்தை இப்போது வீட்டில் இருக்கிறார். குழந்தையுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், எவ்வளவு விலைமதிப்பற்றது என்பது தெளிவாகிறது. சிகிச்சையளித்த மருத்துவர், செவிலியர் மற்றும் நிபுணர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். எங்கள் அடுத்த அத்தியாயம் இப்போது தொடங்குகிறது” என கூறியுள்ளனர்.