சினிமா

துபாய் தொழிலதிபரை மணந்த நடிகை பூர்ணா - திருமணப் புகைப்படங்களுடன் உருக்கமான பதிவு!

சங்கீதா

துபாயைச் சேர்ந்த தொழிலதிபருடன் விமரிசையாக திருமணம் முடிந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதுசம்பந்தமான புகைப்படங்களை பதிவிட்டு நடிகை பூர்ணா உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூரை பூர்வீகமாகக் கொண்ட நடிகை பூர்ணா, கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘Manju Poloru Penkutty’ என்ற மலையாளப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம், தெலுங்குப் படங்களில் நடித்து வந்த அவர், நடிகர் பரத்தின் ஜோடியாக ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். இந்தப் படத்தை தொடர்ந்து, ‘கொடைக்கானல்’, ‘கந்தக்கோட்டை’, ‘துரோகி’, ‘காப்பான்’, ‘லாக்கப்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் உருவான ‘பிசாசு 2’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ஷம்னா கசிம் என்ற தனது இயற்பெயரை திரைத்துறைக்காக பூர்ணா என்று மாற்றிக்கொண்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள நடிகை பூர்ணா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஜேபிஎஸ் குரூப் ஆஃப் கம்பெனியின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஷானித் ஆசிப் அலியுடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூகவலைத்தளப்பக்கங்களில் வெளியிட்டு, ‘தற்போது அதிகாரப்பூர்வமாக குடும்பத்தினருடன் ஆசியுடன், வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்துக்கு நகருகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இந்நிலையில், நேற்றிரவு துபாயில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலியை இஸ்லாமிய முறைப்படி விமரிசையாக திருமணம் செய்துக்கொண்டதாகக் கூறப்படுகிது.

நண்பர்கள் வழியாக இருவரும் அறிமுகமானலும், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்துள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நான் உலகின் மிக அழகான பெண்ணாக இல்லாமல் இருக்கலாம், அல்லது ஒரு நல்ல வாழ்க்கைத் துணையின் அனைத்து குணநலன்களையும் பெறாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் ஒருபோதும் என்னைக் குறைவாக உணரவிடவில்லை.

நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை நீங்கள் நேசித்தீர்கள், என்னை மாற்ற முயற்சிக்கவில்லை. என்னில் உள்ள சிறந்ததை வெளிக்கொணருவதற்காக என்னை ஊக்கப்படுத்தினீர். இன்று, நம் நெருங்கிய சொந்தங்களுக்கு மத்தியில் நீங்களும் நானும் இந்த அற்புதமான இனிய பயணத்தைத் தொடங்குகிறோம். இது கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும், ஆனால் எந்த சூழ்நிலையிலும் எப்போதும் உங்களுடன் அன்பாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.