சினிமா

1 கோடி ரூபாய் வேண்டும்... நடிகை பாயல் கோஷ் மீது மான நஷ்ட வழக்கு தொடுத்த ரிச்சா சாதா 

EllusamyKarthik

பாலிவுட் சினிமா இயக்குனர் அனுராக் காஷ்யப் கடந்த 2013இல் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்தார் என மும்பையின் வெர்சோவா காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் புகார் கொடுத்திருந்தார் நடிகை பாயல் கோஷ்.

“ஐந்து வருடங்களுக்கு முன்னர் பணி நிமித்தமாக அனுராக் காஷ்யப்பை சந்தித்திருந்தேன். அப்போது அவர் என்னை அவரது வீட்டுக்கு வரும்படி அழைத்தார். நான் சென்றதும் தனி அறையில் என்னை பாலியல் ரீதியாக சீண்டினார்.

படைப்பாளி என்ற திரையின் கீழ் ஒளிந்துள்ள அரக்கனை வெளி உலகிற்கு அடையாளம் காட்டவே இதை செய்துள்ளேன். இதனால் எனக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. அதிகாரிகள் என் புகார் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்” என பாயல் கோஷ் தனது புகாரில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் அனுராக்கின் பாலியல் ரீதியான சீண்டலுக்கு நடிகை ரிச்சா சாதாவும் ஆட்பட்டிருப்பதாக அவர் தெலுங்கு மொழி சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தபோது சொல்லியிருந்தார்.

அதனையடுத்து நடிகை ரிச்சா சாதா பாயல் கோஷ் மீது நீதிமன்றத்தில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்திருப்பதாக சொல்லி 1 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடுத்தார்.

மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் பாயல் கோஷ் தனது கருத்துகளை திரும்ப பெற்றுக் கொள்ள தயாரா என கேட்கப்பட்டது. 

அதற்கு அவரது சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அவரது கருத்துகளை திரும்ப பெற்றுக் கொள்ளவும், இந்த  விவகாரத்தில் ரிச்சா சாதாவிடம் மன்னிப்பு கேட்க உள்ளதாகவும் விளக்கம் கொடுத்துள்ளார்.