சினிமா

கோவா சர்வதேச திரைப்பட விழா: ஆஸ்கருக்குச் செல்லும் ’கூழாங்கல்’ திரையிட தேர்வு

sharpana

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரித்துள்ள, இந்தியாவின் சார்பாக ஆஸ்கர் விருதுக்குச் செல்லும் ’கூழாங்கல்’ திரையிட தேர்வாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ‘கூழாங்கல்’ படத்தை தங்களது ‘ரெளடி பிக்சர்ஸ்’ சார்பாக தயாரித்துள்ளனர் நயன்தாரா-விக்னேஷ் சிவன். தற்போது, சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க ’கூழாங்கல்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே, பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் போட்டியிட்ட ‘கூழாங்கல்’ தற்போது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியிருக்கிறது.

வரும் நவம்பர் 20 முதல் 25-ஆம் தேதி வரை சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் நடைபெறுகிறது. 52-வது பதிப்பில் திரையிடப்படும் இந்திய பனோரமா பிரிவுக்கான திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வழக்கமான திரைப்படங்கள் பட்டியலில் 226 படங்களிலிருந்து 25 திரைப்படங்கள் தேர்வாகியுள்ளது. இந்த 25 படங்களில் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’கூழாங்கல்’ தமிழ் படமும் திரையிடப்படுகிறது.

நடிகர் ராஜேந்திர சிங் பாபு தலைமையில் உள்ள 12 பேர் குழு இந்த திரைப்பட தேர்வுக்கு நடுவர்களாக இருந்துள்ளார்கள். திரைப்படவிழா வழக்கமான திரைப்பட பட்டியலிலிருந்து அய்மி பாருவா இயக்கியுள்ள செம்கோர் (திமாசா) தொடக்க விழாவில் திரையிடப்பட உள்ளது. அதேபோல, குறு மற்றும் ஆவணப்படங்கள் பட்டியலில் சுமார் 203 படங்களில் இருந்து 20 படங்கள் தேர்வாகியுள்ளது.

எஸ்.நல்லமுத்து தலைமையில் 7 பேர் கொண்ட குழு நடுவர்களாக இருந்துள்ளனர். இதில், ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஸ்வீட் பிரியாணி’ திரைப்படம் திரையிடப்படவுள்ளது.