சினிமா

கோலிவுட்டுக்கு வரும் `சீதா மகாலக்‌ஷ்மி’? மிருணால் தாகூர் கோலிவுட் எண்ட்ரி இந்தப் படத்திலா?

JustinDurai

'சீதா ராமம்' படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகை மிருணால் தாகூர், கோலிவுட்டில் 'சூர்யா 42' படத்தின்மூலமாக கால் பதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'அண்ணாத்த' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படத்தில் சூர்யா நடிக்கிறார். 'சூர்யா 42' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பட்டானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நிகழ்காலம் கலந்து வரலாற்றுப் பின்னணியில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள இப்படத்தை 10 மொழிகளில் இரண்டு பாகமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுதான் நடிகர் சூர்யாவின் அதிகபட்ச பொருட்செலவில் உருவாகும் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இந்தி திரையரங்கு, சேட்டிலைட், டிஜிட்டல் உரிமை ரூ.100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகவுள்ளது. அதன்படி, 'சூர்யா 42' படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிகளில் பாலிவுட் நடிகை மிருணால் தாகூர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மராத்தி மற்றும் இந்தி படங்களில் நடித்து 'சீதா ராமம்' படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானவர் மிருணால் தாகூர். இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியிருந்த நிலையில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. இதையடுத்து மிருணால் தாகூர் தற்போது தமிழில் 'சூர்யா 42' படம் மூலம் 'கோலிவுட் என்ட்ரி' கொடுக்கவுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதுவொருபுறமிருக்க, சீதா ராமம் படத்தில் இணைந்து நடத்திய துல்கர் சல்மாண் மற்றும் மிருணால் தாகூர் இன்றைய தினம் விழாவொன்றில் சந்தித்துள்ளனர். இதுதொடர்பான படத்தை இருவரும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். இருப்பினும் இருவரும் இணைந்து புகைப்படம் எதுவும் எடுக்கவில்லை. மிருணால் தாகூர் தனது இன்ஸ்டாகிராமில் `ஏன் நாம் இந்தவொரு படம் மட்டுமே எடுத்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள துல்கர் சல்மாண், “வாவ்... நான் இதை உணரவே இல்லை. நாம் இணைந்து புகைப்படம் எடுக்க தவறிவிட்டோம்” என்றுள்ளார்.

இதுவும் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.