சினிமா

நடிகை மஞ்சு வாரியர் புகார்: இயக்குநர் வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை

webteam

நடிகை மஞ்சுவாரியர் புகாரை அடுத்து ’ஒடியன்’ பட இயக்குநர் வீட்டில் போலீசார் நேற்று மாலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

மலையாள திரைப்பட இயக்குநர் ஸ்ரீகுமார், ‘ஒடியன்’ என்ற படத்தை 2018 ஆம் ஆண்டு இயக்கினார். இதில் மோகன்லால், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் இயக்குநர் ஸ்ரீகுமார் மீது, நடிகை மஞ்சு வாரியர், கேரள டிஜிபியிடம் புகார் அளித்தார். அதில், ’ஓடியன்’ ரிலீஸுக்குப் பிறகு இயக்குநர் ஸ்ரீகுமார், சமூக வலைத்தளங்களில் என்னை அவமானப்படுத்தி வருகிறார். இதை கண்டுகொள்ளாமல் இருந்தேன். ஆனால் அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன்’ என்று கூறினார். இந்த புகார் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மஞ்சு வாரியரின் புகாருக்கு பதிலளித்த ஸ்ரீகுமார், ’புகாரை சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறேன்’ என்று தெரிவித்திருந்தார்.

நடிகை மஞ்சு வாரியரின் புகாரை அடுத்து, திருச்சூர் கிழக்கு போலீசார், இயக்குநர் ஸ்ரீகுமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். ’ஒடியன்’ படப்பிடிப்பில் கேக் வெட்டும் நிகழ்ச்சி நடந்தபோது, அனைவர் முன்பும் தன்னை ஸ்ரீகுமார் அவமானமாக நடத்தினார் என்றும் மஞ்சு வாரியர் புகாரில் கூறியிருந்தார்.

இந்நிலையில் படத்தின் கேக் வெட்டும் நிகழ்ச்சியின்போது உடன்இருந்த, தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர், தயாரிப்பு நிர்வாகி சாஜி சி ஜோசப், மஞ்சு வாரியரின் ஆடிட்டர் மற்றும் அதில் பங்கேற்றவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பெற்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு, இயக்குநர் ஸ்ரீகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில், இணை எஸ்.பி, ஸ்ரீனீவாஸ் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு கைப்பற்றப்பட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் ஸ்ரீகுமாரிடம் வரும் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.