சினிமா

‘இன்றும் வெட்கப்படுகிறீர்கள்’: சுந்தர்.சி உடனான 25 ஆண்டுகால காதல் வாழ்க்கை குறித்து குஷ்பு

webteam

25 ஆண்டுகால காதல் வாழ்க்கைப் பற்றி நடிகை குஷ்பு ட்விட்டரில் அவரது அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் தனி அடையாளமாக திகழ்பவர் நடிகை குஷ்பு. ‘வருஷம்16’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர், இன்றுவரை முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தமிழில் அறிமுகமான போது பெரிய ஆதரவு இருந்தது. கார்த்திக், கமல்ஹாசன், பிரபு, ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் எனப் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும், தனுஷ் போன்ற இளம்தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து இவர் நடித்துள்ளார்.

சினிமாவில் அறிமுகமான காலத்தில், ‘வருங்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா?’ எனக் கேள்விக் கேட்டபோது, ‘அதற்கு வாய்ப்பே இல்லை’ என பதிலளித்திருந்த இவர், இன்று முழுநேர அரசியல்வாதிகாக வலம் வருகிறார் என்பது அவருக்கே ஆச்சர்யமானதாக இருப்பதாக கூறியிருந்தார். சின்னத்திரை, சினிமா, அரசியல் என பல தளங்களில் பயணித்து வரும் குஷ்பு, ‘சிறுத்தை’ சிவா இயக்கி வரும் ‘தலைவர்168’ படத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் சேர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனக்கு திருமணமாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாக ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “25 வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான் நீங்கள் என்னிடம் காதலை வெளிப்படுத்தினீர்கள். இத்தனை ஆண்டுகளில் இந்தப் புகைப்படங்களைத் தவிர வேறு எதுவும் மாறவில்லை. நான் இன்னும் உன்னை நேசிக்கிறேன். நான் உங்கள் கண்களைப் பார்க்கும்போது நீங்கள் இன்றும் என்னைப் பார்த்து வெட்கப்படுகிறீர்கள். எனக்கு அனைத்தும் நீங்கள்தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவுடன் அவர் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 1995 ஆம் ஆண்டு ‘முறைமாமன்’ படப்பிடிப்பில் இருந்தபோதுதான் சுந்தர் சி தனது காதலை குஷ்புவிடம் தெரிவித்தார். அந்தப் படத்தைதான் குஷ்பு தற்போது சுட்டிக்காட்டி ‘படங்களைத் தவிர வேறு எதுவும் மாறவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.