சினிமா

தமிழில் கதாநாயகியானார் இயக்குநர் பிரியதர்ஷனின் மகள்

webteam

இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படாத தமிழ்த் திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்க உள்ளார்.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். இவர் மலையாள திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர். அடுத்தடுத்த ஹிட் மூலம் முக்கிய நடிகர்கள் பட்டியலில் இருக்கிறார். ஆனால் அவருக்கு தமிழ் சினிமா இன்னும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. அதிகம் எதிர்பார்த்த ‘சோலோ’ திரைப்படமும் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.


 
இந்நிலையில் அவர் மீண்டும் தமிழில் நடிக்க இருக்கும் திரைப்படம் ‘வான்’. இந்தத் திரைப்படத்தை கார்த்திக் என்பவர் இயக்க உள்ளார்.  ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ஜே.செல்வக்குமார் தயாரிக்கவுள்ளார். தீனதயாளன் இசையமைக்கவுள்ள இந்தத் திரைப்படத்துக்கு ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். 

இந்தத் திரைப்படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகைகள் க்ருதி கர்பந்தாவும், இயக்குநர் பிரியதர்ஷனின் மகளான கல்யாணி பிரியதர்ஷனும் நடிகைகளாக ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இது குறித்து பேசிய இயக்குநர் கார்த்திக், “வான் திரைப்படத்தில் மொத்தம் 3 கதாநாயகிகள். இவர்களுக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரமும் உள்ளது. இந்தப் படத்திற்கு நஸ்ரியா, ஜெனிலியா போன்ற துறுதுறுவென்ற கதாபாத்திரம் தேவைப்பட்டது. அதற்கு கல்யாணி சரியாக இருப்பார் என்று தோன்றியது. இந்த மாதத்தின் கடைசியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்தியா முழுவதும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது” என்று தெரிவித்தார்.