சினிமா

”என் சிங்கத்துக்கு ஒரு சிறிய பரிசு” - சூர்யாவுக்கு திருமண நாளில் ஜோதிகா தந்த கிஃப்ட்!

sharpana

15 ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி நடிகர் சூர்யாவுக்கு ஜோதிகா திருமணநாள் பரிசளித்துள்ளார்.

தமிழக இளைஞர்களின் ஃபேவரைட் நட்சத்திர தம்பதிகளான சூர்யா - ஜோதிகா கடந்த 2006 ஆம் ஆண்டு இதே நாளில்தான் காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகிறது. ஆனால்,சூர்யா அதே பேரன்போடு மேடைக்கு மேடை ஜோதிகா மீதான பெருங்காதலை வெளிப்படுத்தி வருகிறார். திருமணத்திற்குப்பிறகு தற்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டதால், ஜோதிகாவை திரும்பவும் நடிக்க வைத்து சமத்துவத்தை நிலைநாட்டி வருகிறார் சூர்யா.

’36 வயதினிலே’, ‘ஜாக்பாட்’, ’ராட்சசி’ போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு ஜோதிகா ‘உடன்பிறப்பே’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், இன்று 15 ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி சூர்யாவை ஓவியமாக வரைந்து அவருக்கு பரிசளித்துள்ளார். ”என் சிங்கத்திற்கு எனது சிறிய திருமணநாள் பரிசு” என்று காதலுடன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சரியான நபரை சந்திப்பது விதி. அவரது மனைவியாக மாறுவது ஒரு விருப்பம். ஆனால் ஒரே நபருடன் ஒவ்வொரு நாளும் அதிகமாக காதலிப்பது நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. ஏனென்றால் அவர் யார் என்பதால்தான். அவர் ஒரு உண்மையான மனிதன். என் குழந்தைகளின் தந்தை, என் கணவர், என் சக நட்சத்திரம், என் அம்மா போன்றவர் மற்றும் மிக முக்கியமாக என் சிறந்த நண்பர்! இந்த சிறப்பு தினத்தில் என் சிங்கத்திற்கு ஒரு சிறிய பரிசு” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகைப்படங்களுக்கு ஹார்ட்டின்களை தெறிக்கவிட்டுக்கொண்டு வருகிறார்கள் ரசிகர்கள்.