சினிமா

சித்ரா தற்கொலை விவகாரம்: கணவர் ஹேம்நாத் கைது...விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

webteam

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். அவரிடம் 6 நாட்கள் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளன

முல்லை - சின்னத்திரையில் முத்திரை பதித்த இந்த கதாபாத்திரத்தின் பெயரை யாரும் எளிதில் மறக்க முடியாது. பக்கத்து வீட்டு பெண்போல், தொலைக்காட்சி வழியாக பலரது இல்லங்களில் வாழ்ந்த முல்லை தற்போது உயிரோடு இல்லை. படப்பிடிப்புக்காக, நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த சித்ரா, கடந்த 9ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலையில் வெளியான இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக சித்ராவை பதிவுத் திருமணம் செய்து கொண்ட ஹேம்நாத்தை போலீசார் துருவித்துருவி விசாரித்து வந்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவான்மியூரில் வீடு கட்டுவதற்கும், சொகுசு கார் வாங்குவதற்கும் அதிகளவில் கடன் வாங்கியுள்ளார் சித்ரா.

அதை அடைப்பதற்காக கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்து சம்பாதிக்க வேண்டிய நெருக்கடி சித்ராவுக்கு ஏற்பட்டது. கடன் சுமையோடு குடும்ப செலவுகளையும் கவனிக்க வேண்டிய நிலையில் இருந்தார் சித்ரா. இந்த சூழலில்தான் ஹேம்நாத்துக்கும் சித்ராவுக்கும் திருமணம் முடிவானது. ஆனால் குடும்ப செலவுகளை கவனித்து வந்த தனது மகளை ஹேம்நாத்துக்கு திருமணம் செய்து வைக்க சித்ராவின் தாய்க்கு சிறிது தயக்கம் இருந்ததாக தெரிகிறது. எனினும் திருமண ஏற்பாடுகள் களைகட்டின.

பிரபல நடிகர், நடிகைகளை அழைத்து பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்த ஆசைப்பட்டார் சித்ரா. இருப்பினும் , ஹேம்நாத்திடம் இருந்து திருமணத்திற்கு எந்த உதவியும் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்துள்ளார் அவர். இது ஒரு புறம் இருக்க, ஆண்களோடு நெருக்கமாக நடிப்பதை விரும்பாத ஹேம்நாத், சித்ராவை நடிக்க வேண்டாம் என திடீரென கூறியுள்ளார். மேலும், சந்தேக கண்ணோட்டத்தோடு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதன் காரணமாக ஏற்கனவே ஒரு முறை தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் சித்ரா.

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதியன்று விடுதி அறையில் இருந்த சித்ராவுக்கும் ஹேம்நாத்துக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் எந்த நடிகருடன் நடனமாடினாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் ஹேம்நாத். இதனால் மனமுடைந்த சித்ரா, நீ இல்லாமல் என்னால் இருக்கமுடியாது என பொருள்படும்படி ஆங்கிலத்தில் I'M SO DEPENDENT ON YOU என கூறியுள்ளார். அவரது காதலை காதிலேயே வாங்காத ஹேம்நாத், 'நீ செத்துத் தொலை.' என வெறுப்பை கக்கி விட்டு அறையை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது மரணத்திற்கு காரணமாக இருந்ததாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.