விஜய் சேதுபதியுடனான திரைப்படத்தில் இருந்து தான் விலகவில்லை என்றும், தயாரிப்பு நிறுவனமே தன்னை நீக்கிவிட்டதாகவும் நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார்
இயக்குநர் எஸ்பி ஜனநாதனின் உதவி இயக்குநரான வெங்கடகிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி தற்போது நடித்து வருகிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அமலாபால் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
படப்பிடிப்பும் தொடங்கப்பட்ட நிலையில் கதாநாயகியை சமீபத்தில் மாற்றி தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. அதில் படத்தில் இருந்து அமலாபால் விலகிவிட்டதாகவும் அவருக்கு பதிலாக மேகா ஆகாஷ் நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அமலாபால் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் விஜய் சேதுபதியுடனான திரைப்படத்தில் இருந்து தான் விலகவில்லை என்றும், தயாரிப்பு நிறுவனமே தன்னை நீக்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மிகுந்த மனவருத்தத்துடன் இதனை எழுதுகிறேன். தற்போதைய விஜய் சேதுபதியில் படத்தில் இருந்து நான் விலகவில்லை. நான் சரிவரமாட்டேன் எனக்கூறி தயாரிப்பு நிறுவனமே என்னை நீக்கியது'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பின்குறிப்பாக விஜய் சேதுபதிக்கும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், '' உங்களை காயப்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை. நான் உங்களது மிகப்பெரிய ரசிகை. உங்களுடன் பணியாற்ற காத்திருக்கிறேன். என் மீது தயாரிப்பு நிறுவனம் பரப்பிய வதந்திக்கு பதிலளிப்பதற்காகவே இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.