சினிமா

சந்தானம் பட ஹீரோயினுக்கு கொரோனா தொற்று!

sharpana

நடிகை வைபவி சாண்டில்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானார் நடிகை வைபவி சாண்டில்யா. இப்படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றது. நடிகர் சிம்பு இசையமைத்த இப்படத்தில் ‘காதல் தேவதை’ பாடல் இப்போதும் இளைஞர்களின் ஃபேவரைட் பாடல்களில் ஒன்று. யுவன் ஷங்கர் ராஜாவும் சிம்புவும் போட்டி போட்டு பாடி காதலில் உருக வைத்தனர். படத்தை விட இப்பாடலில் கவனம் ஈர்த்தார் வைபவி சாண்டில்யா.

மராத்தி நடிகையான வைபவி அம்மொழி படங்களில் நடித்துள்ளார். அதோடு, கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’. 2019 ஆம் ஆண்டு வெளியான ‘கேப்மாரி’ படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார். மீண்டும் சந்தானத்துடன் இவர் நடித்துள்ள ‘சர்வர் சுந்தரம்’ படம் விரைவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா வேகமாக பரவிவரும் சூழலில் பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இயக்குநர் லோகேஷ் கனராஜுக்கு நேற்று கொரோனா என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை வைபவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளதை தெரிவித்துள்ளார். ”கடந்த புதன்கிழமை எனக்கு காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்பட்டது. சோதனை செய்ததில் மூன்று நாட்களுக்குப் பிறகு ரிசல்ட் வந்துள்ளது. எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் மட்டுமல்ல. எனது அப்பா அம்மாவுக்கும் கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்