சினிமா

முத்தையா திரைக்கதையில் விக்ரம் பிரபு நடிக்கும் ‘டைகர்’

sharpana

நடிகர் விக்ரம் பிரபுவின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

’பகையே காத்திரு’, ’பாயும் ஒளி நீ எனக்கு’, ‘டாணாக்காரன்’ உள்ளிட்டப் படங்களில் நடித்துவரும் நடிகர் விக்ரம் பிரபு அடுத்ததாக ‘டைகர்’ என்ற த்ரில்லர் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தினை அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்க, திரைக்கதையும் வசனங்களையும் இயக்குநர் முத்தையா எழுதுகிறார். இதனால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.  விக்ரம் பிரபு நடிப்பில் கடைசியாக முத்தையா இயக்கிய ‘புலிக்குத்திப் பாண்டி’ வெளியாகி கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. ‘டைகர்’ படத்தில் ஸ்ரீதிவ்யா நாயகியாக நடிக்கிறார். சாம் சிஎஸ் இசையமைக்கிறார். 

படம் குறித்து இயக்குநர் கார்த்தி பேசும்போது, “புலி படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும், பரபர த்ரில்லராக இருக்கும். ஒரு திரைக்கதை எழுத்தாளராக இந்த திரைப்படத்தில்  இயக்குனர் முத்தையா பங்களிப்பது உண்மையில்  உணர்வுப்பூர்வமாக எனக்கு  மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. படத்திற்கு இது ஒரு முக்கிய ஈர்ப்பை தரும் அம்சமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தத் திரைக்கதையை கூற  வாய்ப்பளித்ததற்கும், இப்படத்தை ஒப்புக்கொண்டதற்கும்  விக்ரம் பிரபு சாருக்கு, மிகுந்த  நன்றி. ஒட்டுமொத்த தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய தூணாக அமைந்துள்ளனர். இது நிச்சயமாக பார்வையாளர்களை ஈர்க்கும், பரபர த்ரில்லராக, ஒரு நல்ல திரையரங்கு அனுபவத்தை தரும் படமாக இருக்கும்” என்றார்.

எம் ஸ்டுடியோஸ் மற்றும் ஓபன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் தயாரிக்க, கதிரவன் ஒளிப்பதிவு செய்கிறார், இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இயக்குநர் கார்த்தி, விக்ரம் பிரபு, முத்தையா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். ‘வெள்ளக்காரதுரை’ வெற்றிப்படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபுவும் ஸ்ரீதிவ்யாவும் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.