சினிமா

ராயப்பேட்டை எபாஸ் பள்ளியில் நடிகர் சங்கத் தேர்தல் ?

ராயப்பேட்டை எபாஸ் பள்ளியில் நடிகர் சங்கத் தேர்தல் ?

webteam

நடிகர் சங்க தேர்தல் புனித எபாஸ் பள்ளியில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. 

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற திட்டமிடப்பட்டது. இந்தத் தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க சென்னை காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி கல்லூரியில் தேர்தல் நடத்துவதை தவிர்க்க வேண்டும் எனப் பட்டினப்பாக்கம் காவல்துறை பரிந்துரைத்தது. 

விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தபோது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது என்று நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும், “நந்தனம் ஓய்.எம்.சி.ஏ, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி மாற்று இடத்தை பரிந்துரைக்க வேண்டும். நடிகர் சங்க தேர்தலை விட மக்களின் பாதுகாப்பே முக்கியம். எம்.பி., எம்.எல்.ஏ தேர்தலை விட நடிகர் சங்க தேர்தலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் தேர்தலை நடத்த ஆட்சேபனையில்லை” என்று நீதிபதி தெரிவித்திருந்தார். 

இதைத்தொடர்ந்து நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் தேர்தல் நடக்கு என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் சங்க தேர்தல் புனித எபாஸ் பள்ளியில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறையும் புனித எபாஸ் பள்ளியில்தான் நடிகர் சஙகத் தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.