சினிமா

இவ்வளவு கோடிகள் வந்தது எப்படி? ஐடி அலுவலகத்தில் நடிகர் யஷ் விளக்கம்!

இவ்வளவு கோடிகள் வந்தது எப்படி? ஐடி அலுவலகத்தில் நடிகர் யஷ் விளக்கம்!

webteam

நடிகர் யஷ், தன் தாய் புஷ்பாவுடன் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று நேற்று விளக்கம் அளித்தார். 

பிரபல கன்னட ஹீரோ யஷ். கடந்த சில நாட்களுக்கு முன், தமிழ், இந்தி, கன்னடத்தில் வெளியான ’கே.ஜி.எஃப்’ என்ற படத்தில் இவர் ஹீரோ வாக நடித்திருந்தார். இந்தப் படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு கன்னட ஹீரோக்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

நடிகர்கள் சிவராஜ்குமார், சுதீப், யஷ், புனித் ராஜ்குமார், தயாரிப்பாளர்கள் ராக்லைன் வெங்கடேஷ் உட்பட பலர் வீடுகளிலும் அலுவலகங்க ளிலும் மூன்று நாட்கள் இந்த சோதனை நடந்தது. இதில் கணக்கில் வராத பணம், சொத்து ஆவணங்கள், தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. நடிகர் யஷ் வீட்டில் இருந்துதான் கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. 

இதையடுத்து வருமான வரித்துறையினர், விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அவர்களுக்கு நோட்டீஸ் அளித்தனர். அதன்படி, சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் உட்பட சிலர் நேரில் சென்று விளக்கமளித்தனர். யஷ் படப்பிடிப்பில் பங்கேற்க செல்வதாகக் கூறி அவகாசம் கேட்டிருந்தார்.  

இந்நிலையில் நடிகர் யஷ்-சின் ஆடிட்டர் வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இவர் பல நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு ஆடிட்டராக இருப்பது தெரிய வந்தது. இவரிடமிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இந்நிலையில் நடிகர் யஷ், நேற்று தன் அம்மா புஷ்பாவுடன், வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.