சினிமா

“நகைச்சுவை மூலம் மனிதர்களின் மாரடைப்பைத் தடுக்கும் விவேக் நலமுறவேண்டும்!”: வைரமுத்து

sharpana

”நகைச்சுவை மூலம் மனிதர்களின் மாரடைப்பைத் தடுக்கின்ற விவேக் கலைப்பணியை வாழ்நாளெல்லாம் தொடர வேண்டும்” என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்திருக்கிறார். 

சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்த நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, அவரது மனைவி மற்றும் மகள் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அவருக்கு எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் விரைந்து குணமாக வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ”சின்னக் கலைவாணர் தம்பி விவேக் விரைந்து நலமுற்று மீள வேண்டும்; மனிதர்களின் மாரடைப்பைத் தடுக்கின்ற நகைச்சுவைக் கலைப்பணியை வாழ்நாளெல்லாம் தொடர வேண்டும். வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், அவரது உடல்நிலையை கொரோனா தடுப்பூசியுடன் தொடர்புபடுத்தி விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில், நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் “விவேக் நேற்று தடுப்பூசி போட்டதையும் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையும் தொடர்புபடுத்த வேண்டாம்.

இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மருத்துவர்கள் தங்கள் கடமையை செய்யட்டும். தயவு செய்து தடுப்பூசி போடுங்கள். வதந்திகள் மற்றும் அனுமானங்களை நம்பவேண்டாம்” என்று கூறியுள்ளார்.