நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷாலின்‘வீரமே வாகை சூடும்’ குடியரசு தினத்தையொட்டி வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது. அறிமுக இயக்குநர் து.ப சரவணன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நாயகியாக டிம்பிள் ஹயாதி அறிமுகமாகிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிடோர் நடித்துள்ளார்கள். இந்த நிலையில், தற்போது ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு.
ட்ரெய்லரில் 'தன்னோட உயிரை பாதுகாத்துக்க வேற வழியே இல்லாம கொலை செய்றதுக்கும், மத்தவங்களைக் கொன்னு உயிர் வாழணும்னு நினைகிறதுக்கும் வித்தியாசம் இருக்கு’, ‘ஒரு குற்றத்தைக் கண்டுப்பிடிக்கிறதைவிட அதை எந்தக் கண்ணோட்டத்துலப் பார்க்கணும்ங்கிறதுதான் ஒரு நல்ல போலிஸ்காரனோட முக்கியத் தகுதி’ போன்ற வசனங்களும் காட்சிகளும் கடந்த 2012 ஆம் ஆண்டு மதுரையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை நினைவூட்டுகிறது.
பெற்ற மகளையே பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றக் கணவரை கொலை செய்துவிட்டு சரணடைந்தார் உஷா ராணி என்றப் பெண். எந்த சூழலில் அப்பெண் தனது கணவரையேக் கொன்றார் என்பதை உணர்ந்த மதுரை மாவட்ட எஸ்.பி அஸ்ரா கார்க் தற்காப்புக்காக செய்யப்பட்டக் கொலை என்றுக்கூறி ஐபிசி பிரிவு 100 -ன் கீழ் உஷா ராணியை விடுதலை செய்தார். நீதிமன்றமும் அஸ்ரா கார்க் விடுவித்தது சரி என்று தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல், திருவள்ளூர் மாவட்ட முன்னாள் எஸ்.பி அரவிந்தனும் ஒரு பெண்ணை விடுதலை செய்தார். இந்த உண்மை சம்பவங்களின் தொகுப்பாக படம் இருக்கலாம் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. அதற்கேற்றார்போல், காவல்துறை அதிகாரியாக விஷால் நடிக்கிறார்.