சினிமா

புது வண்ணாரப்பேட்டை மதுக்கடையை மூடுங்கள்: விஷால் அறிக்கை

webteam

புது வண்ணாரப்பேட்டை மதுக்கடையை மூடுங்கள் என்று நடிகர் விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

நடிகர் விஷால் சமீபகாலமாக அரசியல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகிறார். அதன் அடையாளமாக ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இருந்தார். அவரது வேட்பு மனு நிகாரகரிக்கப்படவே பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் இப்போது அவர் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், “2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று நான்காவது முறையாக முதல் அமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்து அதனை தொடங்கியும் வைத்தார். ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி 500 மதுக்கடைகளை தமிழக அரசு மூடவிருப்பதாக தகவல் என செய்திகள் வெளியாகிறது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. 

ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட புது வண்ணாரப்பேட்டை - திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் க்ராஸ் ரோட் ஜங்ஷன் பகுதியில்  அமைந்துள்ள இரண்டு மதுக்கடைகள் அங்கிருக்கும் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கின்றன. இந்த மதுக்கடைகளால் பெண்களும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த மதுக்கடைகளை மூடச்சொல்லி அடிக்கடி போராட்டங்கள் நடைபெற்றாலும் அரசு இன்னும் அவற்றுக்கு செவி சாய்க்கவில்லை. எனவே மூடவிருக்கும் 500 மதுக்கடைகள் பட்டியலில் இந்த மதுக்கடைகளையும் சேர்க்க ஆவண செய்யுமாறு தமிழக அரசையும் ஆர்கே நகர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் தினகரனையும் கேட்டுக்கொள்கிறேன். 

இதேபோல் தமிழ்நாடு முழுக்கவிருக்கும் பிரச்னைக்குரிய, பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறாக இருக்கும் மதுக்கடைகளையும் இந்தப் பட்டியலில் சேர்க்க தமிழக அரசை வேண்டிக்கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.