சினிமா

படப்பிடிப்பில் மீண்டும் விபத்துக்குள்ளாகி விழுந்த விஷால்- 'லத்தி' ஷூட்டிங் ரத்து

JustinDurai

ராணா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் நடிகர் ரமணா, நந்தா இணைந்து தயாரித்து வரும் படம் 'லத்தி'. இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் இரவு பகலாக நடந்து வருகிறது.

ஏற்கெனவே, இப்படத்தில் இடம் பெறும் இறுதிக்கட்ட 20 நிமிட காட்சிக்காக ஹைதராபாத்தில் 30 நாட்கள், ஸ்டண்ட் காட்சி பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் அமைப்பில், புது இயக்குநர் வினோத்குமார் டைரக்‌ஷனில்  பிரமாண்டமாக படமாக்கப்பட்டது. பாழடைந்த பில்டிங்கில் படமாக்கப்பட்டபோது நடிகர் விஷாலுக்கு கையில் விபத்து ஏற்பட்டு, சில நாட்கள் படப்பிடிப்பு ரத்தானது. பிறகு கேரளாவுக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து முடித்தார்.

படத்தில் மீண்டும் ஒரு ஸ்டண்ட் காட்சி சென்னையில் இப்பொழுது இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்ற நிலையில், இரவு பகலாக ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் படமாக்கி வருகிறார்.

கைதி ஒருவரை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு செல்லும் போலீஸ் கான்ஸ்டபிள் விஷால் திடீரென அதிர்ச்சியாகிறார். 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கத்தி, கம்புகளுடன் ஜீப்பை நிறுத்தி தாக்க ஆரம்பிக்க, தைரியமாக கீழே இறங்கி அவர்களை அடித்து தாக்கி கொண்டு கைதியை பிடித்து செல்கிறார். இந்தக் காட்சியில், 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் விஷாலை சுற்றிகொண்டு கை, கால், உடம்பில் தாக்க, எதிர்பாராத விதமாக காலில் நிஜமாகவே அடி விழ, துடிதுடித்து கீழே விழுந்தார் விஷால்.  எழும்பி நின்று நிற்க முடியாமல், கீழேயே இருந்து விடுகிறார். உடனே அவருக்கு 'பர்ஸ்ட் எயிட்' சிகிச்சை அளிக்கப்பட்டது.

உடனே மாலை நேர படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அவரை மருத்துவரிடம் கூட்டி சென்று சிகிச்சை அளித்தார்கள்.  நல்வாய்ப்பாக எலும்பு முறிவு எதுவும் இல்லை என்றும் பிசியோ செய்தால் போதும் என்று டாக்டர் சொல்ல, தீவிரமாக பிசியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாளை மீண்டும் பரிசோதிக்கப்படு வலி இல்லையென்றால் மறுபடியும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் விஷால் எனப் லத்தி படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.