சினிமா

வட்டிக்கு கடன் பெற்ற விவகாரம் - தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது நடிகர் விஷால் புகார்

நிவேதா ஜெகராஜா

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி மீது நடிகர் விஷால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழில் வெளியாகி வெற்றியடைந்த நாட்டாமை, சூரிய வம்சம், துள்ளாத மனமும் துள்ளும், ஜில்லா உள்ளிட்ட 90 திரைப்படங்களை தயாரித்தவர் ஆர்.பி. சவுத்ரி. இவர் தற்போது திரைப்படங்களுக்கு வட்டிக்கு கடன் வழங்கும் தொழில் செய்து வருகிறார். ஆர்.பி.சவுத்ரியிடம் நடிகர் விஷால் தன்னுடைய திரைப்படங்களுக்கு கடன் பெற்றிருந்தார்.

இந்த நிலையில் தான் பெற்ற கடன் தொகையையும், அதற்கான வட்டியையும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாகவே ஆர்.பி.சவுத்ரியிடம் செலுத்திவிட்டதாகவும், ஆனாலும் தான் கையெழுத்திட்ட பத்திரங்களின் ஆர்.பி. சவுத்ரி திருப்பி தராமல் மோசடி செய்கிறார் என்றும் நடிகர் விஷால் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தன்னுடைய கையெழுத்து பத்திரங்களை பெற்று தரவேண்டும் என்றும் புகார் கொடுத்துள்ளார் விஷால்.