சினிமா

“விலங்கு சீசன் 2 ஆரம்பிக்குது...” திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் விமல் பேட்டி!

webteam

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை வழிபட்டுச் செல்வது வழக்கம். இதில் திரைத்துறை பிரபலங்களும் அரசியல் கட்சியைச் சார்ந்த பலரும் அடங்குவர். அப்படி இன்று நடிகர் விமல் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

வாகை சூடவா, களவாணி திரைப் படங்களில் நடித்த நடிகர் விமல் இன்று தனது மனைவி பிரியதர்ஷினி மற்றம் குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து திருக்கோயில் வளாகத்தில் உள்ள யானை பராமரிப்பு கூடத்தில் உள்ள யானை தெய்வானைக்கு நடிகர் விமல் தனது குடும்பத்துடன் சேர்ந்து கரும்பு உள்ளிட்ட உணவு வகைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நடிகர் விமல் பேசுகையில், “நான் மா.பொ.சி என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறேன். தெய்வ மச்சான் மற்றும் மைக்கேல் என்ற புது இயக்குனரிடம் கை கோர்த்து புதிய படம் ஒன்றில் நடித்து வ்ருகிறேன். மேலும் பல்வேறு நல்ல திரைப்படங்கள் கிடைத்துள்ளன. விலங்கு சீசன் 2-விலும் ஆரம்பிக்க உள்ளது” என தெரிவித்தார்.

தொடர்ந்து “தேசிங்கு ராஜா, கலகலப்பு போன்ற முழு நீள காமெடி படமும் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. விலங்கு வெப் தொடருக்கு பிறகு நல்ல கதையம்சம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன். அம்மாதிரியான படங்களாக மா.பொ.சி. இருக்கும். இப்படத்தில் முதன் முதலில் சென்னை வட்டார மொழியில் நடித்து வருகிறேன். என்னைப் பற்றி பரவி வரும் வதந்திகளை முருகன் பார்த்து கொள்வார்” என்றார்.

மேலும் பேசுகையில், “நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கியது இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.