சினிமா

திருமண நிகழ்ச்சியில் நடிகர் விமலின் விலையுயர்ந்த செல்போன் திருட்டு: காவல்துறையில் புகார்

sharpana

திருமண நிகழ்ச்சியில் நடிகர் விமலின் விலை உயர்ந்த செல்போன் திருடு போனதையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் கொடுத்தார்.

’களவாணி’, ’கலகலப்பு’, ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ’தேசிங்கு ராஜா’ உள்பட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விமல். இவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், "கடந்த 12-ம்தேதி கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன். அப்போது ரசிகர்கள் என்னுடன் செல்பி எடுத்து கொண்டனர். அப்போது என்னுடைய விலை உயர்ந்த செல்போனை அங்கு அமர்ந்திருந்த இடத்தில் வைத்திருந்தேன்.

திரும்பி வந்து பார்த்த போது விலை உயர்ந்த செல்போன் காணாமல் போனது. இதன் பிறகு கடந்த 3 நாட்களாக தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே காவல்துறை என்னுடைய செல்போனை கண்டுபிடித்து தரும்படி கேட்டு கொள்கிறேன்" என்று புகாரில் நடிகர் விமல் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் கானாத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கானாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், மதுரையில் நடிகர் சூரியின் அண்ணன் வீட்டு திருமண விழாவில் 10 சவரன் நகையை திருடிய ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை மதுரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதே விக்னேஷ் தான் மதுரையில் திருடுவதற்கு முன்பாக கானாத்தூர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பதாக தெரிகிறது. அதனால், இவர் நடிகர் விமலின் செல்போனை திருடியிருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.