சினிமா

திருச்சி, விருதாச்சலத்தில் ’விஜய் விலையில்லா விருந்தகம்’ துவக்கிய விஜய் மக்கள் இயக்கம்

sharpana

ஏழைகளுக்கு இலவச உணவளிக்கும் ‘விஜய் விலையில்லா விருந்தகம்’ தஞ்சாவூர் மற்றும் மற்றும் சென்னையைத் தொடர்ந்து தற்போது விருதாச்சலம் மற்றும் திருச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தினரால் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றிற்கு முன்பிருந்தே தஞ்சாவூரில் ‘விஜய் விலையில்லா உணவகம்’ ஆரம்பித்து ஏழைகளுக்கு மூன்றுவேளை உணவையும் தொடர்ந்து வழங்கி வருகின்றனர் தஞ்சை விஜய் மக்கள் இயக்கத்தினர். கடந்த இரண்டு வருடங்களாக இவர்களின் பணி தொடர்ந்து வரும் நிலையில், சமீபத்தில் தென்சென்னையிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் ‘விஜய் விலையில்லா விருந்தகம்’ ஆரம்பித்து உணவளித்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது திருச்சி மற்றும் விருதாச்சலத்திலும் விஜய் விலையில்லா விருந்தகத்தை துவங்கி ஏழைகளுக்கு உணவளித்து வருகின்றனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.

இந்த நிகழ்வில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு துவங்கி வைத்தார். ஏற்கனவே, விஜய் மக்கள் இயக்கத்தினர் கொரோனா ஊரடங்கில் சாலைகளில் வசிக்கும் ஆதரவற்ற மக்களும் ஏழைகளுக்கும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உணவு, மளிகைப்பொருட்கள், காய்கறி, கிருமி நாசினி தெளிப்பு போன்ற உதவிகளை செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.