ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசிப் படமாக உருவானது ‘ஜனநாயகன்’. இந்தாண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தது CBFC தரப்பு. அது குறித்த பிரச்னைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு ஜூலை 9ஆம் தேதி CBFCயிலிருந்து இப்படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜனநாயகன் படம் ஜூலை 23ஆம் தேதி (இன்று) வெளியாகும் எனப் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. தமிழகத்தில் மட்டும் இப்படம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 8 ஆயிரம் வரையிலான திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டது.
இந்தப்படம் ஏற்கெனவே சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடப்பட்டு இருந்தாலும், விஜய் நடித்துள்ள கடைசிப் படம் என்பதால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. தமிழகத்திற்கு முன்னதாகவே கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் ‘ஜனநாயகன்’ படம் வெளியானது. அப்போது ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்’ என்ற டைட்டில் கார்டுடன் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. ‘ஜன நாயகன்’ படம் வெளியாவதற்கு முன்பு திரையரங்குகளில் கூடிய ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ஆட்டம் பாடலுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திரைப்பிரபலங்கள், அமைச்சர்கள் பலரும் ‘ஜன நாயகன்’ படத்தை தியேட்டருக்குச் சென்று ரசித்தனர். இதற்கிடையே, ’ஜனநாயகன்’ திரைப்படத்தை தியேட்டரில் கண்டுகளித்தபோது சில அமைச்சர்கள் ஆனந்த கண்ணீர்விட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.