சினிமா

`பாதுகாப்பாக மீண்டுவிட்டேன்'- ஹார்ட்டீன் போட்டு சந்தோஷமாக நன்றி சொன்ன விஜய் ஆண்டனி!

நிவேதா ஜெகராஜா

கடந்த 16-ம் தேதி நடிகர் விஜய் ஆண்டனி, மலேசியாவில் நடந்த பிச்சைக்காரன் – 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டிருந்தது. இதில் படுகாயமடைந்திருந்த விஜய் ஆண்டனி, சமீபத்தில் சென்னை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். இன்று அவருக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்துள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனி தான் இயக்கி நடிக்கும் `பிச்சைக்காரன் 2’ படத்திற்கான படப்பிடிப்பை, மலேஷியாவில் நடத்தி வந்தார். கடந்த ஜனவரி 16-ம் தேதி, மலேசியாவின் லங்கா தீவில் சேசிங் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. கடலில் படகை வேகமாக ஓட்டிச் சென்ற விஜய் ஆண்டனி எதிர்பாராத விதமாக இன்னொரு படகில் மோதி விபத்துக்குள்ளானார். இதனால் முகம் மற்றும் வாய் பகுதிகளில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சுய நினைவிழந்து கடலில் மூழ்கிய அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தது படக்குழு.

தீவிரமான சிகிச்சைக்குப் பிறகு தற்போது அவர் உடல்நலம் தேறியுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் ஆண்டனியின் நண்பரும், தயாரிப்பாளருமான தனஞ்ஜெயன் இந்த விபத்தைப் பற்றி ட்விட்டரில், “விபத்தினால் ஏற்பட்ட காயத்திலிருந்து விஜய் ஆண்டனி விரைவாக மீண்டு வருகிறார். லங்காவியில் உள்ள மருத்துவமனையில் அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவருடைய குடும்பத்தினர் லங்காவியில் அவருடன் இருக்கின்றனர். அவரை சென்னைக்கு அழைத்து வருவது பற்றிய முடிவை அவர்கள் எடுப்பார்கள். விஜய் ஆண்டனி விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்திப்போம்எனத் பதிவிட்டிருந்தார்.

மேலும் வாய் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள், சென்னை சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வதாக விஜய் ஆண்டனி கூறியியிருக்கிறார். அதைத் தொடர்ந்து சென்னையில் பிரபல மருத்துவமனையில் விஜய் ஆண்டனிக்கு சிகிச்சை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் விஜய் ஆண்டனி தற்போது ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில் அவர், “பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு தளத்தில் மூக்கு மற்றும் தாடை பகுதியில் ஏற்பட்ட காயங்களிலிருந்து பாதுகாப்பாக மீண்டுவிட்டேன்; முக்கியமான அறுவை சிகிச்சை நிறைவடைந்தது. விரைவில் எல்லோருடனும் பேச வருகிறேன். என் உடல்நலம் மீதான உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

விரைந்து அவர் முழுமையாக குணமடைய வேண்டும் என்று பலரும் அவரது பதிவின் கீழ் பதிவிட்டு வருகின்றனர்.