சினிமா

”நியாயத்தின் பக்கம் நிற்பதே நடுநிலை” - கவனம் ஈர்க்கும் உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ டீசர்

sharpana

”நியாயத்தின் பக்கம் நிற்பதுதான் நடுநிலை” - கவனம் ஈர்க்கும் உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ டீசர்


உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

அனுபவ் சின்ஹா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் இந்தியாவையே உற்றுநோக்க வைத்த 'ஆர்டிகிள் 15' திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். நாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார்.’பிக்பாஸ்’ ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி, தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி ராஜசேகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். சமீபத்தில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், தற்போது டீசரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

தூக்கில் தொங்கியடடி இரண்டு சிறுமிகளுடன் தொடங்கும் டீசரில் ‘பொள்ளாச்சி சுதந்திரப் பாளையம் அருகே ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள்’ என்று செய்தியாக பின்னணிக் குரல் ஒலிக்கும்போதே இசையும் காட்சிகளும் உ.பியில் கடந்துபோன உண்மை சம்பவங்களை நினைவூட்டி மனதை பதைபதைக்க வைக்கின்றன. ’இந்த ஏரியாவுல இதெல்லாம் சாதாரணம் சார். கொஞ்ச நாளுல மறந்துடுவாங்க’, ’வலியில கத்துனாகூட ஏன் கத்துறன்னுதான் கேப்பானுங்களே தவிர, அடிக்கிறவனை எதுக்கு அடிக்கிறன்னு கேக்குறதுக்கு நாதி இல்ல’ போன்ற வசனங்கள் சாதியின் கோரத்தை சமூகத்திற்கும் கடத்துகின்றன. மேலும், ‘ஒருவன் நல்லவனா இருக்கிறதும் கெட்டவனா இருக்கிறதும் சாதியில் இல்லை. அவன் உள்ள இருக்கிற குணத்துலதான்’,‘நடுநிலை என்பது என்னைப் பொறுத்தவரை நவுடுல நிக்கிறது இல்ல சார். நியாயத்தின் பக்கம் நிற்பதுதான் நடுநிலை’ போன்ற வசனங்களும் கவனம் ஈர்க்கின்றன. காவலர் கெட்டப்பில் உறுத்தாமல் இதயத்தில் நிற்கிறார் உதயநிதி. குறிப்பாக, தினேஷ் குமாரின் ஒளிப்பதிவும் தமிழரசன் பச்சமுத்துவின் வசனங்களும் திபு நினன் தாமஸின் இசையும் ’நெஞ்சுக்கு நீதி’ யை மனதுக்கு நெருக்கமான படமாக மாற்றக்கூடியதாய் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கின்றன.