சினிமா

அக்சய் குமாருடன் வெளிநாடு பறந்த தலைவாசல் விஜய் !

jagadeesh

"பெல் பாட்டம்" எனும் பாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் அக்சய் குமாருடன் வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார் நடிகர் தலைவாசல் விஜய்.

இந்தியாவில் பொது முடக்கம் காரணமாக திரைப்பட படப்பிடிப்புகளுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் அக்சய் குமார் நடிக்கும் "பெல் பாட்டம்" திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக படக்குழு சிறப்பு அனுமதி பெற்று தனி விமானத்தில் லண்டன் சென்றுள்ளது. நடிகர் அக்சய் குமார் தன் குடும்பத்தினருடன் லண்டன் சென்றுள்ளார். இந்தப் படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் தலைவாசல் விஜய் நடிக்கவிருக்கிறார்.

இது குறித்து "டைம்ஸ் ஆஃப் இந்தியா"வுக்கு பேசியுள்ள தலைவாசல் விஜய், "கொரோனா காலகட்டத்தில் இது போன்று பயணிப்பது ஒரு த்ரில்லிங்கான அனுபவம். மொத்த விமான நிலையம் ஒரு பயோ வார் பகுதி போலவே காட்சியளித்தது. அனைவரும் PPE உடைகள், கண்ணாடிகள், முகத்தை மறைக்கும் ஷீல்டு உள்ளிட்டவைகளை அணிந்து இருந்தார்கள்" என்றார்கள்.

மேலும் "முன்பு இருந்ததை போல எங்களை வரவேற்க ஒருவரும் இருக்கவில்லை. நாங்களே எங்களுடைய உடைமைகளை எடுத்து சென்றோம். அனைத்து வேலைகளையும் நாங்களே செய்தோம். படக்குழுவினரை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்காக அனைத்து விஷயங்களையும் தயாரிப்பாளர் செய்திருந்தார். நாங்கள் படப்பிடிப்பு முன்பாக கட்டாய தனிமைப்படுத்துதல் செய்து கொள்ள இருக்கிறோம். மேலும் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் ஒரு மருத்துவர் கண்டிப்பாக எப்போதும் இருப்பார்" என்றார் தலைவாசல் விஜய்.