சினிமா

``என்னை பொறுப்பேற்க சொல்லாதீர்கள்”- ட்விட்டர் மோதல் குறித்து நடிகர் சுதீப் கருத்து

நிவேதா ஜெகராஜா

அனூப் பண்டாரி இயக்கத்தில் கிச்சா சுதீப் நடித்திருக்கும் கன்னடப் படம் 'விக்ராந்த் ரோணா', 3டியில் உருவா தமிழ் உட்பட மற்ற இந்திய மொழிகளிலும் டப் செய்யப்படுள்ளது. ஆங்கிலத்திலும் கூட வெளியாக உள்ளது.

இதன் தமிழ் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் படத்தின் கிச்சா சுதீப், ஷ்யாம், அனூப் பண்டாரி, சத்யஜோதி தியாகராஜன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். படத்தின் இயக்குநர் "இந்தப் படத்தை 3டியில் உருவாக்கியிருக்கிறோம். அது மிக அற்புதமாக வந்திருக்கிறது. படத்தின் கதை எல்லா இடத்திலும் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும்” என்றார்.

நடிகர் சுதீப் பேசும் போது "சினிமா மேல் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. அது எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்லும். அதுதான் இப்போது எங்களை இங்கே அழைத்து வந்திருக்கிறது. இந்தப் படம் உருவாக என் வாழ்க்கை எனக்கு இன்ஸ்பிரேஷன் கொடுத்தது. நான்கு வருடமாக இந்தப் படத்தை உருவாக்கினோம். மேலும் இதனை 3டியில் உருவாக்க விரும்பிய காரணம், படத்துக்காக பெரிய உலகத்தைப் படைத்திருக்கிறோம். அதற்குள் பார்வையாளர்களை அழைத்து வருவதே நோக்கம். இதற்கடுத்ததாகவும் நான் நடிக்கும் 'பில்லா ரங்கா பாட்ஷா' படத்தையும் அனூப் தான் இயக்குகிறார்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் அஜய் தேவ்கனுடன் நடந்த ட்விட்டர் விவாதத்தை பற்றி கேட்ட போது, “நான் அதை ஒரு சண்டையாக பார்க்கவில்லை. அவர் என்னுடைய நண்பர் தான். எல்லோரையும் மதிக்க வேண்டும் என்று என்னை என் தந்தை வளர்த்திருக்கிறார். மேலும் நான் தொடங்காத ஒரு விஷயத்திற்கு என்னைப் பொறுப்பேற்க சொல்லாதீர்கள். மற்றபடி அதை ஒரு சண்டை என நினைக்கவில்லை" என்று கூறினார்.

- கார்கி ஜான்சன்