சினிமா

’சினிமாவில் 10 ஆண்டுகள் நிறைவு’ - உருக்கமுடன் நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன்

sharpana

சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆனதையொட்டி நடிகர் சிவகார்த்திகேயன் அனைவருக்கும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் கடந்த 2012 ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘மெரினா’ படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படம் இதே பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகி பாராட்டுக்களைக் குவித்தது. இந்தப் பத்து வருடங்களில் 18 படங்களில் நடித்து தமிழ் நடிகர்களில் சிறந்த எண்டெர்டெய்னராக வலம் வருகிறார. நடிப்பு, நடனம், நகைச்சுவை என அனைத்திலும் ஆல் ரவுண்டராக திகழும் சிவகார்த்திகேயன் திரைத்துறைக்கு வந்து 10 ஆண்டுகள் ஆனதையொட்டி தனது வளர்ச்சிக்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு துவங்கியது இந்தப் பயணம். இன்று உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும் எனக்கு அளித்திருக்கும் இடம் நான் நினைத்துக்கூடப் பார்த்திராதது. இத்தருணத்தில் எனக்கு முதல்பட வாய்ப்பு அளித்த இயக்குநர் பாண்டிராஜ் அவர்களுக்கும் அத்தனை தயாரிப்பாளர்களுக்கும் உடன் நின்று பயணித்த அத்தனை இயக்குநர்களூக்கும், என் சக கலைஞர்களுக்கும் அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் என் இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றி” என்று உருக்கமுடனும் நன்றி தெரிவித்துள்ளார்.