சினிமா

அக்டோபரில் தொடங்கும் சிவகார்த்திகேயனின் ‘சிங்கப்பாதை’ படப்பிடிப்பு?

sharpana

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் ’சிங்கப்பாதை’ படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது.

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், பிரியங்கா அருள் மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின், இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. சிவகார்த்திகேயன் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்துள்ள ‘டாக்டர்’ வரும் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகிறது. அதோடு, இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ படமும் வெளியீட்டிற்கு தயாராய் உள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநர் அசோக் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘சிங்கப்பாதை’ என்னும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். அப்பா, மகன் என இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இமான் இசையமைக்கிறார். இப்படத்தை தயாரிக்கும் கேஜேஆர் ஸ்டூடியோஸ் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவிருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது.