சினிமா

“நன்றி வேண்டாம், நலமாகி வாங்க போதும்” - நெல் ஜெயராமனிடம் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

webteam

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனை நேரில் சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் நலம் விசாரித்துள்ளார். 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் வேளான் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வாரிசாக இயற்கை விவசாய பண்ணையை உருவாக்கி யானைக்கவுனி, கருங்குருனை உள்ளிட்ட150க்கும் மேற்பட்ட பண்டைகால பாரம்பரிய நெல் வகைகளை கண்டறிந்து அதனை விளைவித்து வந்தவர் நெல் ஜெயராமன். 

ஆண்டுக்கொருமுறை தனது ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி பலருக்கும் பயிற்சி அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார் நெல் ஜெயராமன். அப்படி நெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு தலா 1 கிலோ பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கி வந்தார். அந்த நெல்விதைகளை பெற்றுச் செல்லும் விவசாயிகள் தங்களின் நிலத்தில் அதை விதைத்து இயற்கை தொழில்நுட்ப முறையில் சாகுபடி செய்து மறு ஆண்டு நெல் திருவிழாவின் போது 4 கிலோவாக திரும்ப பெற்று அதனை மீண்டும் புதிய 4 விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கிவருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதன் மூலம் பல லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் ஈடுபட வைத்து உற்பத்தியை பெருக்கி சந்தைப்படுத்தி சாதனை செய்தார். 

இவரது சேவையை பாராட்டி குடியரசுத் தலைவர் விருது மற்றும் தமிழக அரசின் உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கடும் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளான ஜெயராமன் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். இவரை நடிகர்கள் சிவகார்த்திகேயன், கார்த்தி, சூரி போன்றவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். 

தன்னை அப்பல்லோவில் சேர்த்து மொத்த செலவையும் பார்த்த சிவகார்த்திகேயனை நேரில் சந்திக்க விரும்பியதாக கத்துக்குட்டி படத்தின் இயக்குநர் சரவணனிடம் நெல் ஜெயராமல் கூறியிருக்கிறார். இந்த தகவலை அறிந்த சிவகார்த்திகேயன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயராமனை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். 

அப்போது, “நன்றி சொல்லாதீங்கண்ணே, நலமாகி வாங்க அதுதான் தேவை என்று சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார். இந்த தகவலை இயக்குநர் சரவணன் தனது ட்விட்டரில் பதிவிட்டு ஒரு விவசாயியை காக்க துடிக்கும் நல்ல மனசு கோயிலுக்கு சமம் என்று தெரிவித்துள்ளார்